Thursday, January 16, 2014

தகவல் அறியும் உரிமை சட்டம்- சவாலும் எதிர்பார்ப்பும்



திரிவேணி ஒரு ஏழைப்பெண். கிழக்கு டெல்லி குடிசைப்பகுதி ஒன்றில் வசிப்பவர். பரம ஏழைகளுக்கான அந்த்யோதயா அட்டை அவரிடம் உள்ளது. இதை எடுத்துக் கொண்டு எப்போது சென்றாலும் நியாய விலைக்கடையில் இவருக்கு உணவு தானியம் கிடைப்பதே இல்லை. கடை மூடப்பட்டிருக்கும் அல்லது கடைக்காரர் ""ஸ்டாக் தீர்ந்துவிட்டது'' என்பார். ஆறு மாதங்களாக இதே நிலை.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இவர் மனு சமர்ப்பித்தார். தனது நியாய விலைக்கடையில் எவ்வளவு தானியம் தனது பெயருக்கு வழங்கப்பட்டது என்ற விபரமும் இதற்கான ரொக்க ரசீதுகள், நகல்களும் தேவை என்று அவர் கோரியிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின் அவருக்கு பதில் வந்தது. கடந்த 3 மாதங்களில் மாதத்திற்கு கிலோ 2 ரூபாய் வீதம் 25 கிலோ அரிசியும் கிலோ 3 ரூபாய் வீதம் 10 கிலோ கோதுமையும் வழங்கப் பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரொக்க ரசீது களில் இவரது பெருவிரல் ரேகை பதியப்பட்டிருந்தது. ஆனால், திரிவேணி 10-வது வகுப்பு படித்தவர். கையெழுத்துதான் போடுவார்; கைநாட்டு போட மாட்டார். எனவே ரசீதில் இருந்தது இவரது கட்டைவிரல் கைரேகை அல்ல, போலிக் கைரேகை. கடைக்காரர் இவர் பெயரில் பல மாதங்களாக உணவு தானியங்களை அதிக விலைக்கு யாருக்கோ விற்று வந்திருக்கிறார் என்பது தெளிவானது. திரிவேணிக்கு அதிர்ச்சி. அவரிடம் கடைக்காரருக்கு எதிரான அத்தாட்சிகள் உள்ளன. அவர் நடவடிக்கை  எடுக்குமுன் கடைக்காரர் அவரிடம் வந்து தன்னை மன்னிக்கும்படியும் இனிமேல் தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்றும் கெஞ்சினார். அதன் பிறகு திரிவேணிக்கு சரியான விலையில் சரியான அளவுகளில் நியாய விலைக்கடையில் தானியம் கிடைக்கிறது.

இதேபோல நன்னு என்பவர் தினக்கூலி. கிழக்கு டெல்லியின் மற்றொரு குடிசைப் பகுதியில் வெல்கம் மஸ்டூர் குடியிருப்பில் வசிக்கிறார். ஜனவரி மாதம் தனது குடும்ப அட்டை தொலைந்துபோனதால் புதிய அட்டை கோரி மனு செய்தார். பின்னர் 3 மாத காலம் உள்ளூர் உணவு அலுவலகம் உணவு பொருள் வழங்குத் துறை என அலைந்தார். ஆனால் எழுத்தர்களும் அதிகாரிகளும் இவரை ஏரெடுத்துக்கூட பார்க்க வில்லை; பின்னர் இவருக்கு புதிய அட்டை வழங்குவதெப்படி? இவரது மனுவின் நிலை என்ன? பதில் இல்லை. கடைசியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அவர் மனுச் செய்தார். தனது குடும்ப  அட்டை மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? இம்மனுவைப் பரிசீலனை செய்ய வேண்டிய அதிகாரிகள் எழுத்தர்கள் யார் யார்? இவர்கள் மீது காலதாமதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பவையே இவர் கேட்ட தகவல்கள். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுக்கொடுத்த ஒருவாரத்தில் உணவுத்துறை அலுலவர் ஒருவர் நன்னுவைத் தேடி வந்தார். அவருக்கு குடும்ப அட்டை தயாராக இருக்கிறது என்றும், அதனை அவர் அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். அடுத்த நாள் நன்னு அலுவலகத்திற்கு சென்றபோது அவருக்கு அன்பான வரவேற்பு. தேநீர் கொடுத்து உபசாரம். கூடவே ஒரு வேண்டுகோள். குடும்ப அட்டைதான் கிடைத்துவிட்டதே மனுவை விலக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அது. வரவேற்று உபசரித்து வேண்டுகோள் விடுத்தது வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலரேதான்.

இந்த இரு நிகழ்வுகளும் விதி விலக்குகள் அல்ல. டெல்லி அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமல்படுத்திய பிறகு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சாதாரணமாக திரிவேணி மற்றும் நன்னு போன்ற ஏழை மக்களுக்கு என்னதான் வழியிருந்தது? அரசு அதிகாரிகளிடம் புகார் கூறலாம். ஆனால் திரிவேணி சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்; நன்னு சொல்வதையும்தான்.

அரசு நிர்வாகத்திற்குள் அரசு அதிகாரிகளைப் பொறுப்பாக்கும் எந்த அமைப்பு முறையும் இல்லை. தங்களுக்கு ஏதும் ஆகாது என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். அவரது திறமையின்மையும் ஊழலும் கண்டுபிடிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகமிக அரிது. எனவே அவர்கள் தங்கள் போக்கில் தொடருகிறார்கள். ஊழல்  என்பது ஊழல் அதிகாரிகளைப் பொறுத்தவரை ஒரு வியாபாரம் என்கிறார் முன்னாள் மத்திய தலைமை கண்காணிப்பு ஊழல் தடுப்பு அலுவலர் என். விட்டல். இந்த ஊழல் வியாபாரத்தில் ஆபத்து அபாயம் ஏதுமில்லை. இதில் மாற்றம் தேவை எனில் அரசு ஊழியர்களின் பொறுப்பேற்கும் தன்மை சித்தரிக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நடவடிக்கையை எடுக்க வகைசெய்கிறது. இதுவரை கோப்புகளிலும் ஆவணங்களிலும் பதிவேடுகளிலும் ஒளிந்திருந்த ஊழல், திறமையின்மை ஆகியவற்றிற்கெதிரான அத்தாட்சிகள் இதனால் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை காரணமாக திரிவேணி போன்ற எளிய பிரிவு மக்களுக்கு நியாய விலைக்கடைக்காரர் போன்றோருக்கு எதிரான அத்தாட்சிகள் கிடைத்து விடுவதால்  அவர்களுக்கும் கடைக்காரர் போன்ற அதிகாரி களுக்குமிடையே நிலவிய உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திரிவேணி விரும்பியிருந்தால் கடைக்காரர் உரிமத்தை ரத்து செய்து விடமுடியும். இதேபோல நன்னு தனது புகார் பற்றிய நிலவரத்தை அறிய இச்சட்டத்தைப் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் திறமையின்மையை எழுத்துபூர்வமாக ஏற்கின்றனர். தமது புகார் மீது பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்கும் அதிகாரிகள் பெயரை நன்னு கேட்டபோது அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தவறிழைத்த அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் வெகுவாக உயர்ந்து விட்டன. இது இதுவரை இல்லாத வாய்ப்புதானே.


ஏழைகளுக்கான ரேஷன் பொருட்களை வெளியே விற்று லாபம் சம்பாதிக்கும் நியாய விலைக் கடைக்காரர் களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க டெல்லி அரசு நீண்டகாலமாக மறுத்து வந்துள்ளது. டெல்லியில் பெரும் பகுதிகளில் பொது வினியோக முறையானது கோப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சிலபகுதிகளில் மக்கள் ரேஷன் கடையில் தானியம் ஏதும் பெறவேயில்லை. இந்த கடைக்காரர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளிக்கொணர்ந்து இந்த மக்களிடம் காட்டியபோது அவர்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர். நியாய விலைக்கடைக்காரர் குடும்ப அட்டை வைத்திருப்போர் கையெழுத்துக்களை அவர்களே போட்டு பொருட்களை விற்று விடுகின்றனர். டெல்லியில் அனைத்து ரேஷன் கடைக்காரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் கையெழுத்துக்களையும் போட்டு ஏமாற்றி வருகின்றனர். இவ்வளவு தடயங்கள் இருக்கின்றன. அரசு இவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து முன்னுதாரணமாக திகழ இவை எல்லாம் வாய்ப்புகள். ஆனால் உணவுத்துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தானோ என்னவோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இக்கடை களில் சரக்கு இருப்பு கணக்குகளுடன் பொருந்துவதில்லை. இந்தக் கடைகளில் ஆய்வு என்பது நடைபெறுவதேயில்லை.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஆவணங்களைப் பெற்று அரசிடம் அசைக்க முடியாத அத்தாட்சியுடன் புகார் செய்தாலும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுக்கிறது.

இங்கு பிரச்சினை ரேஷன் பொருட்கள் தொடர்புடையது மட்டுமே அல்ல. அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் இதேநிலை உள்ளது. சமுதாயத்தின் அனைத்துக் தரப்பிலும் உள்ள சக்தி வாய்ந்தவர்கள் சட்ட விரோத செயல்கள் மூலம் தங்கள் சுயநலங்களை பாதுகாக்க ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகின்றனர். கருத்து வேறு பாடுகளும், சண்டைச் சூழ்நிலையும் இந்த இடங்களில் தயாராக உள்ளன. சுரண்டல்காரர்கள் ஒருபுறம், சுயநலமி களும், சக்திவாய்ந்த ரவுடி கும்பல்கள் மறுபுறம் இந்தக் கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவர்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஆதரவுடன் தங்கள் சட்டவிரோத செயல்களை தொடருகின்றனர். சட்டம்-ஒழுங்கை அமல்படுத்த வேண்டிய இந்த அமைப்புகள் அராஜக செயல்களை கண்டு கொள்ளாமல் இவர்களுக்கு எதிராக ஆய்வுகளை மேற்கொள்பவர்களை தடுத்து இடையூறு செய்கின்றனர்.

மறுபக்கம் ஏழைகள், எழுத்தறிவற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இதனால் தொடர்ந்து தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் நடவடிக்கைகளை சுயநலக்காரர் களுக்கும், அவர்களுக்கு துணை போவர்களும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எதிர் பார்க்கக் கூடாது. அவர்கள் திருப்பித்தாக்கத்தான் செய்வார்கள். காவல் துறையினரோ, அரசு முகமைகளோ இவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்காமல் போகலாம். வருங்காலங்களில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தகவல் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் கேட்டவுடனேயே தகவல் தரப்படும் என மக்கள் எதிர்பார்க்க முடியாது. அலுவலர்களில் பலத்த எதிர்ப்பு இருக்கும். ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தகவல் தர மறுப்பார்கள். எனவே தேவைப்பட்டால் மக்கள் மேல் முறையீடு அமைப்புகளை அணுகத் தவறக்கூடாது. இல்லாத தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பொது மக்கள் குறைதீர்க்கும் ஆணையம் (டஏஈ) இத்தகைய அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய அதிகாரி களுக்கு அபராதம் விதித்து அதனை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் அதிகாரத்தை நிர்வாக ஆணை மூலம் டெல்லி அரசு பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆணையம் (டன்க்ஷப்ண்ஸ்ரீ ஏழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங்ள் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய்)லி டஏஈலிக்கு சுமார் 1300-க்கு மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்ட மீறல் சார்ந்தவைகளே. இவற்றில் 70% மேற்பட்டவை மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளில் பெற்றவை எனில் மக்களின் குற்றச்சாட்டு உண்மையானது என்று பொருள். ஆனால் இதுவரை ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் எவருக்கும் எதிரான தண்டனை விதிக்க தயாராக இல்லை. இதனால் தகவல் தரா விட்டாலும் தங்களுக்கு ஒன்றும் நேராது என்று அதிகார வர்க்கம் எண்ணம் கொண்டுள்ளது.

பி.ஜி.சி. தலைமைப் பதவியில் வழக்கமாக முன்னாள் அரசு தலைமைச் செயலர்களே இருந்து வருகின்றனர். ஓய்வு பெற்றவுடன் தலைமைச் செயலர் இப்பதவிக்கு வருகிறார். இதனால் அவரது செயல்பாட்டில் குழப்பம் நேருகிறது. தான் அரசின் உயர்ந்த பதவியான தலைமைச் செயலர் பதவியில் இருந்தபோது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல் தர வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

இதிலிருந்து அறியும் பாடம் என்ன? மத்திய மாநில அரசுகள் தகவல் ஆணையர்களை நியமிக்கும்போது உள் நோக்க குறுக்கீடுகள் ஏற்படாத நிலையில் உள்ள அதிகாரிகளையே அப்பதவியில் நியமிக்க வேண்டும்.

தகவல் கேட்பதற்கு பதிலாக தகவலை கேட்பு ஏதுமின்றி அளிப்பதுமுழுமையான வெளிப்படைத்தன்மை நோக்கி அரசு தானாகவே நடைபோட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மக்கள் தகவல் கேட்டுப் பெறுவதற்கு பதிலாக அரசு தானே முன்வந்து மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தகவல்களை கேட்பு ஏதுமின்றி வழங்க வேண்டும். தற்போதைய டெல்லி உணவுத்துறை ஆணையரின் நடவடிக்கை இதில் முன்னுதாரணம் எனலாம். நியாய விலைக்கடைகளின் ஆவணங்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டுமென அவர் ஆணையிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைபெறும் சட்டப்படி எந்த மனுவும் எவரும் அளிக்க வேண்டியதில்லை. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எவர் வேண்டுமானாலும் எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

இத்தகைய நடவடிக்கைகள் அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது நியாயமான பொறுப்பு உள்ள அரசுக்கு தேவைதான். ஆனால் இது மட்டும் போதாது மேலும் பல விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். எனினும் தகவல் பெறும் உரிமை சட்டம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் உறுதியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment