Sunday, June 24, 2012

பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா?

ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் எழுகிறது.
கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சாதாரணமாக, குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள் அனைவருமே, கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை காட்டி வந்திருக்கிறார்கள். முந்தைய குடியரசுத் தலைவர்களில் கே.ஆர். நாராயணன் ஒரு குற்றவாளிக்குக்கூட மன்னிப்பு வழங்கவில்லை. அப்துல் கலாம் இரண்டு பேருக்கு மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக்  கையொப்பமிட்டார்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் சாதனை, இதுவரை பதவி வகித்த எந்தவொரு குடியரசுத் தலைவரும் செய்யாத சாதனை, கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாகச் சுருக்கி இருப்பதுதான். இதுவரை சுதந்திர இந்திய சரித்திரத்தில் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைக் கைதிகளில் 90 விழுக்காடு பேர் பிரதிபா பாட்டீலுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

 உண்மையிலேயே செயற்கரிய சாதனைதான் இது!பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனைக் கைதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால் அதைவிடத் திடுக்கிட வைக்கிறது அவர்களது குற்றமும், பின்னணியும். பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் 30 பேரில் 22 பேர் கொடூரமான கூட்டுப் படுகொலை, கதறக் கதறக் கற்பழிப்பு, குழந்தைகளை ஈவு இரக்கமின்றிக் கொல்வது, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும், கிரிமினல் குற்றங்களுக்காகவும் சிறைச்சாலைக்குப் போவதைப் பொழுதுபோக்காகக் கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகைச் சேர்ந்த ஒன்பது வயது பாலகன் சிர்க்கு பேஸ்ரா. அவனைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிக் கொண்டிருக்க, 1996-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி சுசீல் முர்மு என்பவன் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டுபோய், காளி தேவிக்குப் பலி கொடுத்துப் பூஜை நடத்தி இருக்கிறான். பிறகு அந்தச் சிறுவனின் சடலத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி ஒரு ஏரியில் வீசி எறிந்திருக்கிறான். இது ஒன்றும் முர்முவுக்கு முதல் கொலை அல்ல. அவன் ஏற்கெனவே தனது சகோதரனையே காளிக்குப் பலி கொடுப்பதற்குக் கொன்றிருப்பவன்.2004-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் "இது மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம்' என்று குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட சுசீல் முர்முவின் தூக்குத் தண்டனையை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, பிரதிபா பாட்டீல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறார்.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர யாதவ் 15 வயது சிறுமி ஒருத்தியைக் கற்பழிக்க முயற்சித்திருக்கிறான். அவள் தப்பி ஓடிவிட்டாள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நரேந்தரும் அவனது நண்பன் தர்மேந்திர சிங்கும், 1994-இல் அந்தக் குடும்பத்தையே கொன்று குவித்து விட்டனர். அந்த 15 வயது சிறுமியும் பெற்றோரும் தலை வேறு உடல் வேறாக வெட்டிச் சாய்க்கப்பட்டனர். அந்தச் சிறுமியின் 10 வயது சகோதரன் உயிருடன் எரிக்கப்பட்டான். கொலைகாரர்கள் இருவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஜூன் 2010-இல் மன்னிப்பு வழங்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
பிரதிபா பாட்டீலால் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும் பெருவாரியான பேர்கள் நமது ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளை ஈவு இரக்கமில்லாமல் செய்திருப்பவர்கள். இவர்களுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கக் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என்பதற்காக, 28 மாதங்களில் 30 கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்க வேண்டுமா என்ன?ஒரு குற்றத்தின் பல்வேறு அம்சங்களையும், சாட்சிபூர்வமான ஆதாரங்களையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதுடன் நீதிமன்றத்தின் வேலை முடிந்து விடுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசின் பேரில்தான் குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குகிறார் என்றாலும், மன்னிப்பு வழங்காமல் தவிர்க்கும் உரிமை நிச்சயமாகக் குடியரசுத் தலைவருக்கு இருக்கத்தானே செய்கிறது.அரசியல் சட்டத்தில் 72-வது சட்டப் பிரிவு, தூக்குத் தண்டனை உள்ளிட்ட எந்தவொரு தண்டனையையும் நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ, மன்னிப்பு வழங்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. அப்படியானால், குடியரசுத் தலைவரோ அவருக்கு வேண்டியவர்களோ, விலைபேசப்பட்டு அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கேள்வி முறையே கிடையாதா?
             ஏன் கிடையாது? நிச்சயமாக உச்ச நீதிமன்றத்துக்கு அதற்கான அதிகாரம் உண்டு. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் கருணை மனுக்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் கோரி இருப்பதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவரேயானாலும் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால், அதைக் கேள்வி கேட்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கும், மக்கள் மன்றத்துக்கும் உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.மிக அதிகமான கொலைகாரர்களுக்கும், சமூகவிரோதிகளுக்கும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி சாதனை புரிந்திருக்கும் பிரதிபா பாட்டீல், நிச்சயமாக நினைவுகூரப்படுவார். இதற்காகவாவது...
Source: Dinamani

No comments:

Post a Comment