Sunday, June 24, 2012

அயோத்தியின் வரலாறு






யோத்தி இந்து, முஸ்லீம் ஆகிய இரு பிரிவு மக்களுக்கும் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து மக்கள் ராமர் பிறந்த பூமியாக  கருதுகின்றனர்.  முஸ்லீம்களுக்கு  அயோத்தியில் சராயு ஆற்றின் கரையில் ஷியா, "ஆதாமின் பேரன்' புதைக்கப்பட்ட இடு காடாகும். அயோத்தி ராமர் இந்து காலண்டு படி  தீர்த்த யுகத்தில்  9,00,000 வருடங்களுக்கு முன் பிறந்ததாக  நம்பப்படுகிறது. புராதன வரலாறுப்படி அயோத்தி கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. மேலும் கி.மு. ஆறாவது மற்றும்  ஐந்தாவது நூற்றாண்டுகளில் எழுச்சி யுற்ற புத்த மதத்தினால் அதன் தலை நகரத்துடன் இணைந்ததாகவும், அங்கே புத்தர் சில காலம்  தங்கியதாகவும் கூறப்படுகிறது. அன்றைய சாக்தான் என்றழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய அயோத்தி என அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அயோத்தி  விக்கிரமாதித்தனால் புனரமைக்கப் பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் புத்த மதம் பிராமண ஆதிக்கத்தால் மறைய  தொடங்கியது. பேராசிரியர் ரொமிலா தாபர்,  ""இரண்டாம் சந்திரகுப்தர் தான் விக்கிரமாதித்தன் என்ற பட்டப்பெயரை கொண்டவர்'' என கூறுகிறார். பேராசிரியர் ஷேர் சிங், ""ஸ்கந்தகுப்தா தனது தலைநகரை சாக்தா (அயோத்தி)  மாற்றியதற்கான ஆதாரமில்லை'' என்று கூறுகிறார்.   

அயோத்தி இந்துக்களின் ஏழு புனித தலங் களில் ஓன்றாக விளங்குவதற்கான காரணம் அது ராமர்  பிறந்த இடமாக சொல்லப்பட்டது. அயோத்தியாவில் உள்ள 6,000 இந்து கோயில் களில் 4,000 கோயில்கள் ராமர் தொடர்புடைய தாகும். இதனால் இந்து  அமைப்புகள் அயோத்தி இந்துக்களின் தலைநகரம் என்றும், ராமர் தேசிய கடவுள் என்றும் கூறி வருகின்றனர். அயோத்தி இல்லை என்றால் நாடே இல்லை என்றும், எப்படி கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் புனித பூமியோ அதுபோல இந்துக்களுக்கு அயோத்தி புனித பூமி  என்பது அவர்கள் வாதம்.அடுத்த பிரச்சினையானது அயோத்தியின் இருப்பிடம் பற்றியது. அயோத்தி  பைசாபாத் மாவட்டத்தில் சராயு நதிக்கரைக்கு வலது புறத்தில் தொல்லிலியல் அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அயோத்தியில்   மனித வாழ்க்கை யானது வடக்கு பள்ளப்பான கருப்பு மண் பானை நாகரிகத்தை   (Northern Black Polished ware-NBPW) தாண்டி போகவில்லை என காட்டியது. இது கி.மு 700-ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். இராமாயணம் உண்மையாகவே நடந்திருந்தால் அதற்கான வரலாற்றுஆதாரங்கள் கிடைத்திருக்கும்.(பி.பி.லால்-ராமாயணா இடங்களின் அகழ்வாராய்ச்சி அறிக்கை-1992)  அதேபோல வால்மீகியின் ராமாயணமும் சில நூல்களையும் பேராசிரியர் ஷேர்சிங் ஒப்பிட்டு கூறுகையில், ""வால்மீகியின் கூற்றுப்படி  அயோத்தியா சரி என்றால், அது நேபாளத்தில் பாயும் சராயு ஆற்றின் தெற்கே 22 கிலோமீட்டர் உள்ள இடமாகும். ( பி.எஸ். ஸ்ரீதர மூர்த்தியின் நூல்- ராமா, இராமாயணா மற்றும் பாபர். 1988- ஆம் ஆண்டு வெளியீடு)

முஸ்லீம் வெற்றிக்கு பின்னர் அயோத்தி பிரச்சினை முக்கியக் கட்டத்திற்கு வந்தது. மன்னர் பாபரின் தளபதியான மீர்பாக்ஷி 1528-ம் ஆண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு,  அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டினார் என கூறப்படுகிறது. இப்போது இதுதான் பிரச்சினை. அயோத்தியில் 1975-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்த  தொல்பொருள் நிபுணர் பி.பி. லால் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இதை மறுத்துள்ளது. மேலும் அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க வில்லை என்று தெரிவித்தது. ராஷ்டீரிய சேவா சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு நடத்தும் மானதன்  (Manthan)  பத்திரிக்கையில் 1990 -ஆம் ஆண்டு அக்டோபர் மாத இதழில் இராமர் கோயிலின் தூண்கள் தென்பட்டதாக செய்தி வெளியிட்டது.

18-ஆம் நூற்றாண்டில் நவாப்கள், அவாத், ஷீஜா-உத்-தௌலத் மற்றும் ஆசப்-உத்-தௌலத் ஆதரவினால் அயோத்தி மீண்டும் இந்துக்களின் புனிததலமாக விளங்கியது. பின்னர் இந்து பக்தி இயக்கம் அவந்தி நோக்கி திரும்பியதனால் ஆங்கிலேய அரசு அயோத்தியை தங்களுக் காக எடுத்துக்கொண்டது. இந்த சமயத்தில் நிர்மோஸ் என்ற இந்து துறவி இது இராமர் பிறந்த இடமென பாபர் மசூதி உள்ள இடத்தை உரிமைக்கோரினார். மேலும் ராமர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதி கட்டப் பட்டுள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அயோத்தி பிரச்சினை உருவானது. இது 1853-55-இல் மிகப்பெரிய கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. (வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா, மசூதிப் பிரச்சினை: ஒரு வரலாற்று விசாரணை என்ற நூல்.). 1883-ம் ஆண்டு மே மாதம் பைசாபாத் கமிஷனர் இந்துக்கள் சாபூத்ரா (நடைபாதை) வலது பக்கத்தில் கோயில் அமைக்க முயன்றபோது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு அனுமதி மறுத்தார். 1885-ல் மசுந்ந் ரகுபார் தாஸ் பைசாபாத் சப்கோர்ட்டில் கோயில் கட்ட அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோயில் கட்ட 1886 -இல் அனுமதித்ததுடன், அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் பதட்டம் நிலவியது. முஸ்லீம் போராட்டக் காரர்கள் பாபர் மசூதி முன் கூடினார்கள். இந்துக்களும் அருகிலுள்ள அனுமர் சிலை முன்பு கூடினார்கள். இரு தரப்புக்கும் இடையே மூண்ட கலவரத்தில் 75 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இந்துக்கள் பாபர் மசூதியை கைப்பற்றினார்கள்.

19-ம் நூற்றாண்டில்தான் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பரப்பப்பட்ட செய்தி ஆவணங்களில் பதிவானது. 1822-ல் பைசாபாத் நீதிமன்ற அலுவலர் ஹபிஜுல்லா என்பவர்  பாபரால் கட்டப்பட்ட மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பின்பு இந்த கதையானது, பி.கார்னேகி என்பவரால் பைசாபாத் வரலாற்று ஆவணத்தை 1870- இல் தயாரித்து அலுவலக ஆவணமாக மாற்றப்பட்டது. இது குறித்து பைசாபாத் மாவட்ட ஆவணத்தில் பாபரின் நினைவுகள் என்ற நூலை இதற்காக மொழி பெயர்த்திருப்பது பதிவாகியுள்ளது. ஆங்கிலேய அரசு தனது கோப்பில் "ஜன்மஸ்தன் மசூதி அஜிதியா' என்று எழுதி அதை பதற்றம்  நிறைந்த கோயிலிலின் முன்பாக வைத்தது. 1920-30-ஆம் ஆண்டுகளில் மசூதி முஸ்லீம்களிடம் இருந்த போது அவர்கள் அதை தூக்கி எறிந்தனர். இதனை பைசாபாத் கமிஷனர் 1938- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ம் நாள்  கண்டித்தார்.

1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி இரவு மசூதியின் உள்ளே சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் அப்போதைய நிர்வாகம்  இருதரப்பி னருக்கும் கலவரம் ஏற்படாமலிலிருக்க மசூதியை மூடியது. அதையடுத்து முதன் முதலாக இப் பிரச்சினைக்காக  முதல் விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  அதில் அபதி ராம்தாஸ், சுதர்சன் தாஸ், ராம் சுக்லா தாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை அயோத்தி காவல் நிலையத்தில் பதிவுவானது. இவர் களுடன் மேலும்  50-லிருந்து 60 பேர் வரை கையில் சிலைகளுடன் மசூதியில் நுழைய முயன்றதை அப்போது பணியில் இருந்த அதிகாரிகளும்,  பொதுமக்களும் பார்த்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதற்கு சிறிது காலத்திற்கு பிறகு 5,000- 6,000 மக்கள் கீர்த்தனைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பியவாறு மசூதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால்  அவர்கள் தடுத்து  நிறுத்தப்பட்டனர். 1950-ஜனவரி 16-ம் தேதி கோபால் சிங் விஷார்ட் என்பவர் கோயிலில் வழிபட அனுமதி வேண்டி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  நீதிபதி சிலைகளை அப்புறப் படுத்த உத்தரவிட்டு வழிபாட்டுக்கு அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து 1950-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி  உத்திரபிரதேச அரசு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்து வரலாற்று அறிஞர் சுசில் ஸ்ரீவத்சவா கூறும்போது ""1951-1986  வரை பைசாபாத்தில் நிலைமை அமைதியாகவே இருந்தது. 1936-1950 வரை பதட்டமான சூழ்நிலை நிலவியது. 1951- 1986 வரை எந்த  ஒரு கலவரமும் இல்லாமல் அமைதி காணப்பட்டது. அனைத்திந்திய இந்து மகாசபா மற்றும் பாரதீய ஜனசங்கம் அயோத்தி, மதுரா மற்றும் காசிக்கு ரதயாத்திரை நடத்தியது. 1983-ம் ஆண்டு முழுவதும் விஷ்வ இந்து பரிஷத் பல முக்கிய தலைவர்களுடன் ரதயாத்திரை நடத்தி பல நதிகளின் புனிதநீரை சேகரித்தது  பிரச்சினையை அதிகரிக்க தொடங்கியது''.

1984-ம் ஆண்டு அக்டோபர் வி.ஹெச்.பி          தனது ஸ்ரீ ராம ஜென்ம பூமி முக்தி யாஜ்னா சமிதி மூலம் இதனை தேசிய அளவில் பிரச்சினை ஆக்க முயன்றது. இந்த சமிதி 1984-ஆம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி உருவாக்கப் பட்டது. 1984-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி  அயோத்தியிலிலிருந்து மாநில தலைநகர் லக்னோவிற்கு 130 கிலோமீட்டர் பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை அக்டோபர் 14-ஆம்  தேதி லக்னோ வந்தடைந்தது. அங்கு நடைப்பெற்ற பொதுகூட்டத்தில் முதலமைச் சரிடம் இந்துக்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட  வேண்டும் என வலிலியுறுத்தப் பட்டது. அதற்கு அடுத்த நாளே ஸ்ரீ ராம ரத யாத்திரை உத்திர பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும்  நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை அக்டோபர் 31-ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது.  அங்கு நவம்பர் 2-இல் நடை பெறும் இந்துக்கள்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதால்  இந்நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது.

1985-இல்  பைசாபாத் மாவட்ட நீதிபதி மசூதியின் பூட்டை  திறக்க உத்தரவிட்டு சாமியார்கள் உள்ளே செல்ல அனுமதித்தார். இந்த உத்தரவின் காரணமாக 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மசூதியின் பூட்டு திறக்கப் பட்டது. அப்போதைய ராஜீவ் காந்தி அரசு தேர்தலிலில் மக்களின் வாக்குகளை பெற இவ்வாறாக நடந்துக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் முஸ்லீம் மக்களிடையே ஒருவித பதட்டம் எழுந்தது., வி.ஹெச்.பி தொண்டர்கள் பேரணிகளை நடத்தினார்கள். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த  ராஜேந்திரகுமாரி பாஜ்பாய் ""முஸ்லீம்கள் நீதி மன்ற ஆணையை மதித்து அமைதிகாக்க வேண்டும்'' என்றார்.

சங்க் பரிவார் அமைப்பின் இயக்கம் நாடு முழுவதும் தேசிய சிந்தனை மாநாடுகளை நடத்தியது. பெரும் இக்கட்டான சூழ்நிலை 1989 தேர்தல்களின் போது ஏற்பட்டது. அப் போது மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட நாடு முழுவதிலிலிருந்து செங்கற்கள் கொண்டு  வரப்பட்டன. இதை பற்றி என். ராம் கூறுகையில் ""1989 பொது தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி அரசு வி.ஹெச்.பி அமைப்பினை அடிக்கல் நாட்ட அனுமதித்தது. இது வி.ஹெச்.பி பிஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை உற்சாகப்படுத்தியது'' என்றார். 1989-ஆம் ஆண்டு நவம்பர் 22-24 பொது தேர்தல்கள் மோசமான வன்முறை களமாக இந்திய வரலாற்றில் அமைந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். பாரதீய ஜனதா  கட்சியின் ஆதரவோடு 88 தொகுதிகளை கைப்பற்றி வி.பி.சிங் பிரதமரானார். அவர் பதவி ஏற்றவுடன் இந்த மோதல் குறித்து விவாதிக்க அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு குழுவை ஜனவரி 8, 1990-ஆம் ஆண்டு அமைத்தார். நீதி மன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.

1990-ஆம் ஜனவரி 12-இல் சுப்ரீம் கோர்ட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்களிடம் விளக்கம் அளிக்குமாறு கோரியது. அப்போது "அனைத் திந்திய  பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழு' சம்பவம் குறித்து விசாரிக்க தென் மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால்  அவர்கள் இந்துவாகவோ, முஸ்லீ மாகவோ இருக்ககூடாது என்று கூறியது. பிறகு முஸ்லீம் தலைவர்கள் வி.பி. சிங்கை சந்தித்து இது இடத்திற்கான பிரச்சினை அல்ல, வரலாற்று பிரச்சினை என்றும் இதில் கோர்ட்டு முடிவு செய்ய தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும்  கூறினர். 1990-ஆம் ஆண்டு ஜனவரி 27-28-இல் தர்மாச்சாரியா சாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் அலகாபாத்தில் கூடி, அதில்  பிப்ரவரி 14-ஆம் தேதி கோயில் கட்டலாம் என்று முடிவு செய்தன. வி.பி. சிங் மிகுந்த சிரமங்களுக்கு இடையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் நிலையை எடுத்து கூறி கட்டுமான பணியை தள்ளி வைத்தார். அதற்கு பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவான பதிலும்  வராததால் ஹரித்துவாரில் கூடிய வி.ஹெச்.பி கட்டுமான பணியை அக்டோபர் 30-இல் தொடங்குவது என்று முடிவு செய்தது.

வி.பி.சிங் பாராளுமன்றத்தில் மண்டல் கமிஷன் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு மேல் ஜாதி இந்துக்கள், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் எல்.கே. அத்வானி அயோத்தியில் கோயில் கட்ட அனுமதிக்க கோரியும் இந்துத்துவாவிடம் அதை  ஒப்படைக்க கோரியும் 10,000 கி.மீட்டர் ரதயாத்திரையை தொடங்கினார். அத்வானியும் அவருடன் யாத்திரை மேற்கொண்டவர்களும்  அக்டோபர் 23-ஆம் தேதி பீகாரில் கைது செய்யப்பட்டனர். இதனால் பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் அரசு நவம்பர் 9-ஆம் தேதி பதவி விலகியது.

நவம்பர் 1990 முதல் மார்ச் 1991 வரை பிரதம ராக இருந்த சந்திரசேகர் வி.ஹெச்.பியையும் முஸ்லீம் அமைப்பையும் பேச்சுவார்த்தையில்  ஈடுபட செய்தார். இந்த இரு அமைப்புகளும் முதல்முறையாக டிசம்பர் 1, 1990-ஆம் தேதி சந்தித்தன. இந்த இரு அமைப்புகளும் தங்களிடம்  இருந்து ஆதாரங்களை டிசம்பர் 23-ஆம் தேதி  அரசாங்கத்திடம் அளித்தன.  பின்பு மீண்டும் ஜனவரி 10, 1991-இல் மீண்டும் சந்தித்தன. அப்போது அவை இரு அமைப்புகளில் இருந்து நான்கு குழுக்களை அமைக்க ஒப்புதல் அளித்தன. இதன் மூலம் வரலாற்று ஆய்வு நடத்தி  அறிக்கை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் பிரதமரான நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்து அமைப்புகள் மசூதியை இடிப்போம் என்று  அறிவித்தன. இருந்தபோதிலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்கினார் நரசிம்மராவ்.

1992, டிசம்பர் 6 பி.வி. நரசிம்மராவ் அயோத்தி பற்றி பாராளுமன்றத்தில் பேச இயலாமல் போன நேரத்தில் 70,000 சேவா தொண்டர்கள் ராம சதா காஞ்ச்  பகுதியில் பொதுக் கூட்டத்திற்காக கூடினார்கள். மேலும் 500 சாதுக்களும், சாமியார்களும் அடிக்கல் நாட்டு பூஜைக்கு தயாரானார்கள். காலை  11.50 மணிக்குள் ஏறத்தாழ 1500 கர சேவர்கள் தடுப்பை தகர்த்து உள்ளே நுழைந்து போலீசார் மீது கற்களை வீசினார்கள். 1,000 கரசேவா தொண்டர்கள் பாபர் மசூதி உள்ளே நுழைந்த னர். சிலர் மசூதியின் மேலேறி கோபுரங்களை உடைத்தனர். 12.20 மணியளவில்  ஏறத்தாழ 25,000 கரசேவர்கள் வளாகத்தினுள் கூடினர். 2.40 மணியளவில் 75,000 பேர் மசூதியை சூழ்ந்து கொண்டு இடித்தனர்.  இப்போது  பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என பின்னர் தெரிய வந்தது. அத்வானி, முரளி  மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா  (வி.ஹெ.ச்.பி) பஜ்ரங்தலை சேர்ந்த வினய் கதியார் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

டிசம்பர் 8-ஆம் தேதி அன்று அத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இது நாட்டுக் காக இந்து மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம்  என்றும், இதில் அரசாங்கம் தலையிட்டு தொண்டர்களை கைது செய்தது அடக்குமுறையே என்றும், இது அமைப்பை பலப்படுத்துமே  அன்றி அதை அழிக்க இயலாது என்றும் குறிப்பிட்ட அவர், பாபர் மசூதி இடிப்பு  அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியே என்று ஆவேசமாக  குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகே பிரச்சினைக்குரிய இடத்தில் அமைதி திரும்பும்

No comments:

Post a Comment