Thursday, March 27, 2014

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து.... செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

""திராவிட நாகரிகம் மனிதனுக்கு மனிதன் பிறப்பினால் பேதமுண்டு என்பதை ஒப்புக் கொள்வதில்லை. திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் போன்றோர் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்ததாகப் பறைசாற்றிக் கொள்ளவில்லை... பிறப்பினால் பேதமுண்டு என்பதைப் பரப்பியவர்களும், பல்வேறு கொடுமைகளுக்குக்  காரணமான வர்ணாஸ்ரம தர்மம் என்னும் முறைப்படி அதை விரிவுபடுத்தியவர்களும் அவர்கள்தான்!''.

""நாம் சேர, சோழ,* பாண்டிய மன்னர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆங்கிலேயர் இங்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்வரை சக்கரவர்த்திக ளாக இருந்த அசோகனுக்கெதிராக, சந்திர குப்தனுக்குக் கெதிராக, அக்பருக்கெதிராக, அவுரங்க சீப்புக்கெதிராகத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்!''. - இவை இருவர் பேசிய பேச்சுக்களின் பகுதிகளாகும்!.

இவ்விதம் பேசியவர் யார்? தந்தை பெரியாரா? அறிஞர் அண்ணாவா? கலைஞரா? பேராசிரியரா?

அப்பேச்சுக்களின் ""பாணி'' அவர்களுடையது போல் தானே இருக்கிறது? நிச்சயம் அவர்களில் இருவரது பேச்சுக்களாகத்தான் இருக்க வேண்டும்! - இவ்விதம் தோன்றுவதுதான் இயற்கை!

ஆனால், அப்பேச்சுக்களை அவர்கள் யாரும் பேசவில்லை. அவை பேசபட்டபோது கலைஞரும், பேராசிரியரும் பிறக்கவேயில்லை. அறிஞர் அண்ணா 7 அல்லது 8 வயதுச் சிறுவனாக இருந்தார். தந்தை பெரியாருக்கோ அப்போது 38 அல்லது 39 வயது இருக்கலாம் - தமிழகம் தெரிந்த புள்ளியாக அல்ல: ஈரோட்டுப் பிரமுகராக, தாலுக்கா போர்டு துணைத் தலைவராக, கௌவர மாஜிஸ்திரேட்டாக இருந்தார்! - அப்படியானால் அப்பேச்சுக்களுக்கு உரியவர்கள் யார்?

1917-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பேசியதுதான் முதலில் தரப்பட்டிருக்கிற பகுதியாகும்!. இரண்டாவது பகுதி, 1918-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மதுரை மாவட்ட பிராமணரல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை வகித்த (திருச்சி பாரிஸ்டர்) டி.சி. தங்கவேல் (பிள்ளை) பேசியதாகும். ஆம்: இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அன்று அமைப்பு ரீதியாகத் தூவப்பட்ட விதைதான் இன்று திராவிட இயக்கமும், அதன்  கொள்கைகளும் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர்விட்டு, யாராலும் அழிக்க முடியாக விதத்தில் வளர்ந்திருக்கிறது!.

மண்ணைப் பக்குவப்படுத்தாமல் விதையைத் தூவி னால் என்ன பயன் விளையக் கூடும்? வித்தூன்றிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாரைப் போலவே மண்ணைப் பக்குவப்படுத்தியவர்களும் முக்கியமானவர்களே. இந்தியாவின் வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கண்டறிய எவ்விதம் ஐரோப்பியர் உதவி னரோ, அது போலவே திராவிட கலாச்சார மேம்பாட்டை எடுத்துவைக்கவும் அவர்களே பெரிதும் உதவினர். குறிப்பாக கிறித்துவப் பாதிரியார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தபோது, அவரவர்கள் தாய்மொழியில் மதத்தைப் போதிக்க வேண்டும் - என்கிற குறிக்கோள் காரணமாகத் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் காட்டிய ஆர்வம் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஏற்றதொரு ஆதார சூழ்நிலையை உருவாக்கிற்று.

தமிழில் அதிகம் ஈடுபாடு காட்டிய முதல் கிறித்துவப் பாதிரியார் இராபர்ட்-டி-நோபிலி (Robert Di Nobli, 1577-1656) ஆவார். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைப் பகுதியில் வாழ்ந்த இவர், கிறித்துவ மதப் பிரச்சாரத்துக்காகத் தமிழில் உரைநடை நூல்களை இயற்றினார். தமிழையும், வடமொழியையும் கற்ற முதல் ஐரோப்பியர் இவரே! அடுத்து குறிப்பிட்டுக் கூறவேண்டியவர், வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட; மதப்பணியோடு, தமிழ்ப் பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி (Constantius Beschi, 1680-1743) ஆவார்.

1711-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் மதுரையை வந்தடைந்த இவர், பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். நோபிலி போல் அல்லாது, தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை. அக்காலத்தில் எ-ஏ, கெ-கே, கொ-கோ-என்று எழுதும் வழக்கமில்லை. எ, ஓ - என்னும் உயிர் எழுத்துக்களையும், இவ்வுயில்ô எழுத்துக்கள் ஏறிய மெய்யெழுத்துக்களையும் எழுதி, அவற்றின் மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும், புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது. இவர்தான் அதை மாற்றி, எ-ஏ, கெ-கே, கொ-கோ- என்று எழுதும் மரபைப் புகுத்தி, ""தண்டமிழ் மொழிக்கு அதுவரைக்கும் யாரும் செய்யாத பெருந்தொண்டு செய்து அழியாப் புகழ் பெற்றார்''.

அதுமட்டுமின்றி, தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல் நூலாக விளங்கும் ""சதுரகராதி'' இயற்றித் தமிழகராதியின் தந்தை என்ற புகழையும் பெற்றார். திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார். ஐந்திலக்கணங்களையும் கூறும் "தொன்னூல்', தமிழ்ப்பேச்சு மொழியைப் பற்றிய "கொடுந்தமிழ் இலக்கணம்' - ஆகியவை இவர் இயற்றிய இலக்கண நூல்கள். அன்று அவர் உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர் பலர் தமிழ் மொழியிலும் கலாச்சாரத்திலும் தொடர்ந்து ஆய்வு நடத்திடப் பேருதவியாக இருந்தது. அது போலவே - அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்டுவெல் (தர்க்ஷங்ழ்ற் ஈஹப்க்ஜ்ங்ப்ப். 1819லி1891) வேறு எந்த ஐரோப்பியரையும் விட திராவிட மறுமலர்ச்சிக்கு ஆதார சுருதியைத் தனது ஆய்வின் மூலம் உருவாக்கிக் கொடுத்தார்.

1838-இல் சென்னை வந்திறங்கி, தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் நடத்தி, தமிழ்மொழியில் மூழ்கி, நமது மொழியிலும், வரலாற்றிலும் நிபுணர் என்கிற  பெயரைப் பத்தாண்டுகளில் பெற்றார். அவர் 1856-இல் வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) எனும் அவரது ஒப்பற்ற ஆய்வு நூல் மொழியியலுக்குத் தரப்பட்ட உயர்ந்த காணிக்கை மட்டுமல்ல; திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய மாமருந்து மட்டுமல்லத் தூங்கிக் கிடந்த திராவிட மக்களுக்கு அளிக்கப்பட்ட கண் திறப்புச் சிகிச்சையுமாகும்! அது வெறும் மொழி இயல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல! தமிழ்-திராவிட இன வரலாறும் அதில் கூறப்பட்டிருந்தது!

திராவிட மொழிகளின் தொன்மை


  ""திராவிட மொழிகளின் தொன்மை, ஆரியர் வருகைக்குப் (அதாவது கி.மு. 1600-க்கு) பல நூற்றாண்டுகட்கு முன்னென்று தெளியலாம்'' - என்று அவர் தனது ஆராய்ச்சி முடிவினைக் கூறினார்.

- இதற்கென பல மேற்கோள்களைக் காட்டியிருக்கிறார். உதாரணமாக, கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒலிகள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்று ஒலிக்கப்படுவதைப் போன்றே ஒலிக்கப்பட்டன - என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்.

தமிழின் தனித்தியங்கும் ஆற்றல்


  திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்துதான்            பிறந்தன என்கிற சமஸ்கிருதம் பண்டிதர்களின் கொள்கை யையும், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஏ.எச். வில்சன் போன்ற மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் கொள்கையையும் ""குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமில்லை'' - என்று கூறினார். இத்தகைய "குருட்டுக் கொள்கை' தோன்றிடக் காரணம் என்ன?

""தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர் களிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமென்று வடமொழியில் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பி வந்தார்கள். அதனையொட்டியே அவர்கள், திராவிட மொழிகள், வடஇந்திய மொழி மரபுகளிலிருந்து எத்துணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழியினத்திலிருந்து பெறப்பட்டவைகளே என்று சாதித்து வந்தனர். இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நம்பி வந்தனர். அவர்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஓரளவிற்கு வடமொழிச் சொற்கள் தத்பவமாகவும், தற்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால் அம்மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபு மொழிகளும் பல இருந்தன என்பதையும், அவையே அம்மொழியில் சிறப்பியல்புகள் என்பதையும், அவற்றிலேதான் அவ்வம்மொழி களின் தனிப்பட்ட உயிர்நிலை அமைந்து கிடந்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்து கொள்ளவில்லை''.

- இவ்வாறு தன் ஆய்வினை மேற்கொண்ட கால்டுவெல் தமிழ் சமஸ்கிருத மொழியின் தயவின்றியே தனித்தியங்கும் தன்மை பெற்றது என்பதையும் துணிவுடன் எடுத்துக்காட்டினார்.

செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு

பண்டைய இலக்கியங்கள் இயற்றப்பட்ட தூய தமிழ் மொழியாம் செந்தமிழ் இன்றைய பேச்சுத் தமிழோடும், உரைநடைத் தமிழோடும் மாறுபட்டுக் காணப்படக் காரணமென்ன?

இதோ, கால்டுவெல் காரணம் கூறுகிறார்-

""எதனால் அவ்வாவெனிலோ, கண்ணும் கருத்துமாய் இருந்து வடசொற்களையும், வடமொழியெழுத்துக்களையும் விலக்கி, தூய தமிழ்ச் சொற்கள், மரபு மொழிகள்,   அமைப்புகள் ஆகியவற்றையே கையாண்டு வந்துள்ளமையினாலேதான் தமிழ் மக்களிடையே இச்செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு எவ்வளவுக்குப் பரவியிருந்ததென்பது, எழுதப்பட்ட ஒரு தமிழ் நூலில் எவ்வளவுக்கெவ்வளவு வட சொற்கள் அருகிக் காணப்படுகின்றனவோ  அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறந்ததொரு நூலென்றும், எவ்வளவுக்கெவ்வளவு வடசொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அது தாழ்ந்ததொரு நூலலென்றும் கருதி மதிப்பிடும் பழக்கம் பண்டுதொட்டுப் பயின்று வருகின்றமையினாலேயே இனிது தெளியப்படும். பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வளவுக்கெவ்வளவு வடமொழிச் சொற்கள் பயின்று வருகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அந்நூல்கள் அவ்வம்மொழியினராற் சிறப்புடன் போற்றப்படும். தமிழிலோ, எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றனவோ  அவ்வளவுக்கவ்வளவு சிறப்புடன் போற்றப்படும்''.

இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோரும், நகர்ப்புறத்தில் வாழும் பாமர மக்களும் வடமொழிச் சொற்களைக் கையாளாமல் ஒதுக்குவதையும்: அப்படியே அவசியம் கருதிக் கையாள நேரிட்டாலும் "ஜிலேபி' என்பதை "சிலேப்பி' என்றும், "ஸ்டேஷன்' என்பதை "டேசன்' என்றும் உச்சரிப்பதையும் காணலாம். இயல்பு காரணமாக தமிழ் மக்களுக்கு வடமொழி உச்சரிப்பு வாயில் நுழையாமலிருப்பதை வைத்துக் கால்டுவெல் மேற்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

""...சிற்றூர்களிலும் நாட்டுப்புறங்களிலும் வாழ்ந்து வரும் தாழ்ந்த மக்களிடையே வடமொழிச் சொற்களைப் பேச்சுவழக்கிலும் கையாளாமல் ஒதுக்கும் தூய பழக்கம் காணப்படுகிறது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்பு நிலை அம்மொழியிலும், செய்யுள்களிலும், தாழ்ந்த குடிமக்களின் பேச்சுக்களிலுமிருந்ததே ஆராய்ந்து காணப்படும் என்பது ஒரு பொது உண்மையாகும். பிற்காலத்தில் மிகவும் வலிந்து முயன்று எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களிலும், பார்ப்பனர்கள் பேசும் தமிழிலும், மிகவும் கற்றவர்களாகக் கருதப்படும் தமிழர்களின் பேச்சிலுமே வடமொழி மிகைப்படப் பரவி வழங்குகின்றது. அதுவும், சமய உண்மை, அறிவியல், தத்துவம், ஏனைய கலைகளிலுள்ள மரபுச் சொற்கள் ஆகியவற்றை விளக்குமிடங்களில் மட்டுமே இவ்வாறு வடசொற்கள் பெரும்பான்மையும் கையாளப்படுகின்றன. ஆனால், இவ்வாறு காணப்படும் வடசொற்களின் தொகை, ஆங்கில நூல்களில் கையாளப்பட்டுக் காணப்படும் இலத்தீன் மொழிச் சொற்களின் தொகையைவிட மிகுதியானதொன்றன்று''

தமிழ் தவிர்த்த ஏனைய திராவிட மொழிகளில் வடமொழிக் கலப்பு மிகுந்து காணப்படுகிறதென்றால், " "அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டனவல்ல. கிட்டத்தட்ட இன்றியமையாதனவாகவே கருதிக் கையாளப்பட்டன'' - என்று கூறும் கால்டுவெல், ""இந்த நிலைமை வந்ததற்குக் காரணம் அம்மொழிகளின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம்'' - என்றும் கூறியிருக்கிறார்.
""தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு மேற்பட்டதில்லை. தாழ்ந்த வகுப்பினரான திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு பார்ப்பனரான  பரிமேலழகர் என்பார் வகுத்துள்ள உரையே மிகவுஞ் சிறந்ததொன்றாகப் பாராட்டப்படுகிறது''. - இவ்வாறு கால்டுவெல் கூறியுள்ளார்.

அவர் ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிக மேன்மை குறித்தும் விளக்கியுள்ளார். "திராவிட மதத்'தின் தனித்தன்மை குறித்தும் அவர் தவறவில்லை.

""திராவிடர் இந்துக்களானது போரில் தோல்வியடைந்ததாலன்று... நமக்குக் கிடைத்துள்ள மரபுரைகள் அனைத்தும் ஆரியரைக் குறிக்க இந்நாட்டில் எழுந்த பார்ப்பார் (அதாவது சமய மேற்பார்வையாளர்) ஐயர் (தலைவர்) என்ற பெயர்களும் அவர்களது வெற்றி, உடல்வலியால் ஏற்பட்டதன்று: அறிவாலும், ஆட்சித் திறனாலுமே ஏற்பட்டது என்தைக் காட்டும்''.

உயர்ந்தவை அனைத்தும் பிறந்தது அவர்களாலேதான் என்பதற்கு உண்டான கட்டுக்கதைகளையும் கால்டுவெல் வெளிப்படுத்தத் தவறவில்லை. "கலைகளும், இலக்கியமும் திராவிட மக்களுக்கு வகுத்தளித்த தமிழ்முனி' என்று கொண்டாடப்படும் அகஸ்தியர் யார்?

""(அகஸ்தியர் என்று ஒருவர் இருந்தாரென்பது உண்மையானால்) அவர் ஆரிய வந்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட, அக்குடியேற்றக் கட்டுக்கதைக்குத் தலைவரே என்று கூறலாம்''. - இவ்வாறு கால்டுவெல் கூறினார் என்பதைவிட, அதை 1856-இல் கூறினார் என்பதுதான் முக்கியமானது.

அடுத்து தமிழ்க் கலாச்சார மேன்மையையும், பழமையையும் மேலைநாட்டு அறிஞர்களிடையே பரப்பியவர் ஜி.யு. போப் (G.U. Pope, 1820-1907) ஆவார். சைவ சிந்தாந்தப் பெருமை கூறும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்தது அவரது அரிய படைப்புகளில் ஒன்றாகும்.         


ஆதார நூல்கள்: "திராவிட இயக்க வரலாறு' முரசொலி மாறன் (பக்கம் 169- 179)

"கால்டுவெல் ஒப்பிலக்கணம்', மொழி பெயர்த்தியற்றியவர்கள் காழி. சிவகண்ணுசாமிப்பிள்ளை, கா. அப்பாதுரையார் (பக்கம் (54- 142)