Monday, January 20, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-Part 6 (இந்திய பிரதமர்கள் )







கர்ம வீரரும் கசந்தார்!  
பெருந்தலைவர் காமராஜரும் கசக்க ஆரம்பித்ததுதான் இந்திரா வாழ்க்கையில் மறைக்க முடியாத வடுவாக இன்று வரைக்கும் இருக்கிறது.
பெரிய விவகாரமாக இருந்தால் எதையும் நான்கு பேராக யோசித்துச் செய்ய வேண்டும் என்பார்கள். படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய மூவரோடுதான் ஆரம்ப காலத்தில் நேரு ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி - காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். இதில் காமராஜரின் பிம்பம்தான் இந்திராவை எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஏனென்றால், நேருவுக்கு இணையாக அகில இந்தியத் தலைவர்கள் அனைவராலும் காமராஜர் மதிக்கப்பட்டார். நேருவிடம் சொல்ல முடியாததையும் காமராஜரிடம் அனைவரும் சொல்வார்கள். நள்ளிரவைத் தாண்டியும் அவரது வீட்டில் ஆலோசனைகள் தொடரும். நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக் கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது.
அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். காமராஜர் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என்பதால் அவர் மீது கூடுதல் பாசம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ வேறு விதமாக இந்திரா நினைத்தார்.
ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்கள் இனி கட்சியில் இருந்தால் அது நம்முடைய பதவிக்கு, நாற்காலிக்கே வினையாகிவிடும் என்று அரசியல் தலைவர்கள் நினைப்பது எந்தக் கட்சியிலும் வாடிக்கைதானே. இதற்கு இந்திராவும் விதிவிலக்கு அல்ல. காரணம், அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.
இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது. காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700 பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68 குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர் முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.
மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது.
இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத் தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப் போடுகிறார்.
'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’ என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்.
மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச் சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான் என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான் இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.
காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங் ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும் பார்க்க முடியாது'' என்று காமராஜ் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் கொடி எவ்வளவு தூரம் பறந்தது என்று பாருங்கள்.இவ்வளவையும் இந்திரா பார்த்துக்கொண்டுதான் இருந்தார் புவனேஸ்வரில். இந்த மாநாட்டுக்கு வந்த நேரு உடல் நலிவுற்று திரும்பிவிட்டார். அவருக்கான நாற்காலி, காலியாகவே மேடையில் இருந்தது. அந்த நாற்காலி தனக்கா... அல்லது காமராஜருக்கா? என்று இந்திரா யோசித்திருப்பார்.
இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300 ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப் பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன. சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ் போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’ என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது. அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால் கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.
''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில் (அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும். காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்'' என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே! அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம் வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக் கசக்க ஆரம்பித்தது.
சினம் கொள்ள வைத்த சிண்டிகேட்!   
''உங்கள் வழிகாட்டுதல்படிதான் இனி நான் நடந்துகொள்வேன்'' - என்று பெருந்தலைவர் காமராஜருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட இந்திரா அப்படி நடந்துகொள்ளவில்லை.
சிறுசிறு சம்பவங்களில் இந்திரா அப்படி நடந்துகொள்வதை காமராஜர் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நிகழ் காலத்தையும் பாதிக்கும் பல நிகழ்வுகளிலும் இந்திரா இப்படி நடந்துகொள்வதை காமராஜர் சகிக்கத் தயாராக இல்லை.
முக்கியமான முரண்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பை குறைப்பதில் ஏற்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை திடீரென இந்திரா குறைத்தார். காமராஜர் இதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பை எதற்காக இந்திரா குறைத்தார் என்றால்... அன்று இந்தியப் பொருளாதாரம் வேகவேகமாக சீர்குலைந்துகொண்டு இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவல் காரணமாக நாடும் அச்சுறுத்தலில் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் இந்தியாவுக்கு அதுவரை தந்துவந்த உதவிகளை நிறுத்திவிட்டன. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டபோது, 'ரூபாயின் மதிப்பைக் குறையுங்கள்’ என்று இந்த இரண்டு நிறுவனங்களும் நிபந்தனை விதித்தன. இப்படி நிபந்தனை விதிக்க அமெரிக்காவும் தூண்டியது. இதனை ஏற்றுக்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் அந்நிய மூலதனம் நம்முடைய நாட்டுக்குள் வரும் என்று பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா, இந்திய ரூபாயின் மதிப்பை 35.5 சதவிகிதமாக குறைத்தார். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. 'அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது என்று கண்டித்தன. இவர்களோடு, சேர்ந்து காமராஜரும் இதனை எதிர்த்தார். 'பிரதமர் என்னைக் கலந்துகொள்ளாமல் எடுத்த முடிவு’ என்று வெளிப்படையாகக் கூறினார்.
நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்குத் தெரியாமல் மிகமிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவு எடுக்கப் படுகிறது. அதுவும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவு என்றால் எப்படி இருக்கும்?
''நாணய மதிப்புக் குறைப்பைத் தொழில் வளர்ச்சிபெற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியில் ஈடுசெய்ய முடியும். ஆனால் விவசாயத்தை மட்டுமே பெரிதாக நம்பியுள்ள நம் நாட்டுக்கு இது மேலும் துன்பத்தையே கொடுக்கும்'' என்பது காமராஜரின் எண்ணம், இதனை இந்திரா மறுத்தார். ''ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அந்நிய மூலதனம் அதிகமாக வரும்'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார் இந்திரா. அமெரிக்காவிடம் அதிகமான நிதியை இந்திரா வேண்டி நின்றார். தருவதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்கா, மொத்தமாகத் தராமல் பிய்த்துப் பிய்த்து வழங்கியது. இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதுதான்  இந்திராவுக்கு லேசான விழிப்பு ஏற்பட்டது. வடக்கு வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியபோது முழு விழிப்பு இந்திராவுக்கு வந்தது.
''நாம் ஏதோ ஒரு சுழலில் சிக்க வைக்கப் பட்டோம்'' என்று ஓராண்டு கழித்துத்தான் இந்திரா உணர்ந்தார். ''அது நான் எடுத்த தவறான முடிவு. இதனால் அதிகமான தீங்குதான் ஏற்பட்டன'' என்று பிற்காலத்தில் இந்திரா அந்தத் தவறை ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், காமராஜர் இந்திராவை விட்டு மனதளவில் விலகத்தொடங்கினார். 1967 தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது தன்னிச்சையாக இந்திரா நடந்துகொள்வதாக காமராஜர் நினைத்தார். ''நான் செய்த தவறு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆகவே, யாரையும் எக்காரணத்துக்காகவும் அருகில் நெருங்க விடுவது இல்லை'' என்று காமராஜர் வருந்திப் பேச ஆரம்பித்தார். காமராஜர் எதிர்பார்த்தது மாதிரியே 1967 தேர்தல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. மொத்தமுள்ள 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 282 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது என்பதைவிட முக்கியமானது... அனைத்து மாநிலங்களிலும் அதுவரை ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் கட்சி தனது பழைய செல்வாக்கை இழந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இந்திராவின் தவறான வழிகாட்டுதலும், தன்னிச்சையான நடத்தையுமே இதற்குக் காரணம் என்று நினைத்த காமராஜ், ஒரு கடிவாளம் போட்டார்.
''காங்கிரஸின் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துவைக்க வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு. அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமை'' என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைத்தே நிறைவேற்றினார் காமராஜர். காங்கிரஸ் கட்சி சொல்வதைத்தான், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது இந்தத் தீர்மானம். அதாவது பிரதமர் பதவி அதிகாரம் பொருந்தியது அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவரே அதிகாரம் பொருந்தியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது இந்தத் தீர்மானம்.
பிரதமர் ஆவது முக்கியமல்ல; காங்கிரஸ் தலைவராக இருப்பதே அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து இந்திரா உழன்றார். அந்த காங்கிரஸ் தலைவர் பதவி எட்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்தபோது, ஓராண்டு காலத்தில் அலட்சியமாக ராஜினாமா செய்துவிட்டுப் போனோமே என்று வருந்தினார். மூன்று விதமான சிந்தனைகள் அவரை அலைபாயவைத்தன.
இப்போது தலைவராக இருக்கும் காமராஜரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக தான் அந்த இடத்தில் அமர வேண்டும். தான் வர முடியாவிட்டால், தனக்கு வசதியான தன் பேச்சைக் கேட்கக் கூடிய ஒருவரை கொண்டுவந்துவிட வேண்டும். - இந்த மூன்றும் அவரை தூங்கிவிடாமல் தவிக்கவைத்தன.
காமராஜர் மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தார் இந்திரா. ஆனால், அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை காமராஜர். இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்த காமராஜருக்கு மூன்றாவது முறையும் இதனை அடைய விருப்பம் இல்லை. முதல்முறை இருந்த மகிழ்ச்சி இரண்டாவது தடவை இருந்தபோது இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆனால், அவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தார் இந்திரா. அவரிடமும் தனது நிலைப்பாடு இதுதான் என்பதை தெளிவுபடுத்தினார். இந்திராவுக்கு முதல் தடை உடைந்தது.
அடுத்து தன்னை கொண்டுவர காமராஜ் முயற்சிப்பாரா என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சையும் காமராஜர் எழுப்பாதது அவருக்கு ஏமாற்றமே. காமராஜர் போட்டியிடவில்லை என்றதும் தலைமைப் பதவிக்கு எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். 'யாரைத் தேர்ந்தெடுத்தாலும் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று காமராஜ் சொன்னார்.
எஸ்.கே.பாட்டீல், மோகன் தாரியா, அனுமந்தயா ஆகிய மூவரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். போட்டி என்று வந்துவிட்டது. அதுல்யா கோஷ், மனு தாக்கல் செய்யவில்லை. காமராஜரைச் சந்தித்த இந்திரா, சில பெயர்களை பரிந்துரை செய்தார். சுகாதியா, நந்தா, சஞ்சீவையா ஆகியோர் தலைவராக வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்திரா கோரிக்கை வைத்தார். ஆனால் காமராஜரின் பார்வையும், பாதையும் வேறு மாதிரி இருந்தது. தலைவர் பதவிக்கு மனுச் செய்திருந்தவர்களையும் ஒதுக்கினார். இந்திரா கொடுத்த பட்டியலையும் நிராகரித்தார். மைசூருக்கு தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த மனிதர் டெல்லிக்கு வந்தார். நள்ளிரவு நேரம்... 'நீங்கள்தான் அகில இந்திய காங்கிரஸின் அடுத்த தலைவர். நாளை காலை என்னை வந்து சந்தியுங்கள்’ என்று சொல்லி அவரை அனுப்பினார். மறுநாள் காலை வந்த அவரை அழைத்துச் சென்ற காமராஜ், இந்திரா முன் உட்கார வைத்தார். அவர்தான் நிஜலிங்கப்பா.
தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரைக்கூடத் தலைவராக்க காமராஜ் விரும்பவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், டெல்லி செல்வாக்கு இல்லாத நிஜலிங்கப்பாவை பின்னர் நம்மால் சமாளிக்க முடியும் என்று இந்திரா திருப்திப்பட்டுக்கொண்டார். தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தார். நடக்கவில்லை. தான் விரும்பியவரை தலைவராக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் செயல்படவில்லை. காமராஜர் மீண்டும் தலைவராகக் கூடாது என்று விரும்பினார். அது மட்டும் நடந்தது. பரவாயில்லை, சமாளிப்போம் என்று சமாதானம் அடைந்தார். ஆனால் நிஜலிங்கப்பாவின் நிஜமுகம் சில மாதங்களிலேயே இந்திராவுக்குத் தெரிய ஆரம்பித்து. அவர் முகம் இருளத் தொடங்கியது.
தன்னிடம் இருக்கும் பிரதமர் பதவியையே நிஜலிங்கப்பா பறிந்துவிடுவாரோ என்ற பீதி வந்துவிட்டது இந்திராவுக்கு. காமராஜருக்காவது, இது நேருவின் மகள் என்ற பாசம் இருந்திருக்கும். ஆனால் நிஜலிங்கப்பா, நேருக்கு நேராக முஷ்டியை உயர்த்தினார். தலைமைக்குக் கட்டுப்பட்டதுதான் கட்சி என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்க முயற்சித்தார். அதனை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்தவும் தொடங்கினார்.
பெரிய தலைவர்கள் கூடிக்கூடி உட்கார்ந்துகொண்டு தனக்கு அறிவுரை சொல்வதை அவஸ்தையாக நினைத்தார் இந்திரா. இந்தப் பெருந்தலைவர்கள் 'சிண்டிகேட்’ என அழைக்கப்பட்டார்கள். இந்திரா ஆதரவாளர்கள் இதனை கேலிச் சொல்லாகவும் பயன்படுத்தினார்கள்.
''1962-ல் சீனப் படையெடுப்பு நிகழ்ந்த பின், அதனால் மிகவும் மனம் நொந்துபோன நேருஜி, தேசத்தின் எதிர்காலம் பற்றி மிகவும் அதிகமாகக் கவலைப்படத் தொடங்கினார். அந்த நாட்களில் நேருஜி, என்னையும் சஞ்சீவி ரெட்டி போன்ற நண்பர்கள் சிலரையும் அடிக்கடி அழைத்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். இப்படி அவருடன் ஆலோசனை நடத்துவதற்காக நாங்கள் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த ஆலோசனைக் குழுவை பத்திரிகையாளர்கள் 'சிண்டிகேட்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். இந்த சிண்டிகேட்தான் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூரைப் பிரதமராக்க முடிவு செய்தது. இதே சிண்டிகேட்தான் அவர் மறைவுக்குப் பிறகு இந்திராவையும் பிரதமர் ஆக்கியது'' என்று 'சிண்டிகேட்’க்கு விளக்கம் சொன்னார் காமராஜர்.நேருஜியின் 'சிண்டிகேட்’ இந்திராவை சினம்கொள்ள வைத்தது. அதற்கு நிஜலிங்கப்பாவே நிஜக் காரணமாய் ஆனார்.

பெரியாரை பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கன்களேன் -சாவி (பெரியார் பேசுகிறார்)


பெரியார் பேசுகிறார் 1965
திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், ''ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.
உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.
''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.
சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.
''ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''
''தெரியுமே. வாசன் அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். நான் 'குடியரசு’ பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். 'கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே கிளார்க்கா இருந்தார். ரொம்ப யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், நான்தான் திரு.வி.க-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். 'நவசக்தி’யிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.''
''ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?''
''அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி.நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு? நரசிம்மய்யருக்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துலே சர் பி.ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிட்டார்.''
''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?''
''சீனிவாச முதலின்னு ஒரு வக்கீல். ஒரு நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டுவந்தார். அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே சேர்மன்.''
''எந்த வருஷம் அது?''
''தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு ஞாபகம்...''
''வரதராஜுலு நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?''
''ஆமா; போயிருக்கேன். 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். அப்ப காங்கிரஸ் சத்தியமூர்த்தி 'குரூப்’ கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு 'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு 'குரூப்’.
நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.''
''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''
''எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.''
''ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''
''ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''
''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''
''இருந்தாங்க... திரு.வி.க-வும் வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க...''
''இந்த 'பிராமின் - நான்பிராமின்’ தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''
''எப்படி வந்தது வினைன்னா - வ.வே.சு.ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் 'நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, வீரர்களை உற்பத்தி செய்யப்போறதாச் சொன்னாங்க. பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு.ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். நான், 'முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.''
வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''
''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''
''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!''
''என்ன ஆச்சு?''
''முதல் மந்திரியாயிருந்தாரே ஓ.பி.ஆர்.ரெட்டியார்...''
''ஆமாம்...''
''அவர் மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம். 'குருகுலத்துலே பார்ப்பனப் பிள்ளைங்களையும் எங்களையும் வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு இலை போட்டு சாப்பாடு. எங்களுக்கு பிளேட். அவங்களுக்கு உப்புமா, எங்களுக்கு பழைய சோறு. அவங்க உள்ளே படுக்கணும். நாங்க வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். அவ்வளவுதான். ஜாதி வேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே வ.வே.சு.ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. 'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''
''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''
''என்ன சொன்னாரு! 'நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு வைதீக சென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ்.சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. வ.வே.சு.ஐயர், எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.''
''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''
''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.''
''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''
''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே.
ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சுபோச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்னு பேர். டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''
''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''
''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா வகுப்பு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு ராஜாஜி தீர்மானத்தைத் தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது...''
''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.
இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.
நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்.
''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.
''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -
உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.
''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர், அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.

''வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?'' - மணியன் கேட்கிறார்.
''அதுவா? அது ஒரு கதை... சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே, என்னது?'' என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார்.
'' 'காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?’னு கேட்டேன்...'' என்கிறேன் நான்.
''எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் 'கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அப்ப அவர் சொன்னார்: ''நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப் பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா, பேசாம இருந்துக்கோ''ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான் தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ், சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ் கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!''
''அதுக்கப்புறம் நீங்க என்ன செய்தீங்க?''
''சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் 'நான் பிராமின்ஸ்’க்கு ஒதுக்கணும்னு ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். 'இதைக் கொள்கையா வேணும்னா வெச்சுக்குவோம். தீர்மானமாப் போட வேண்டாம்’னு ராஜாஜி கேட்டுக்கிட்டார். 1920-ல் திருநெல்வேலி மகா நாட்டிலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். அப்ப தலைவராயிருந்த எஸ்.சீனிவாசயங்கார் அதை அனுமதிக்காமத் தடுத்துட்டார். அப்புறம் திருப்பூர்ல, சேலத்துல, திருவண்ணாமலையில எல்லா இடத்துலேயும் தடுத்துட்டாங்க...''
''உங்க தீர்மானத்தை அதோடு விட்டுட்டீங்களா?''
''விட்டுடுவனா? திரு.வி.க-வை காஞ்சீபுரம் மகா நாட்டுக்குத் தலைவராக் கொண்டு வந்தேன். சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான் பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். திரு.வி.க. 'பாலிஸிக்கு விரோதம்’னு சொல்லி பிரசிடென்ட்டுங்கிற முறையிலே 'டிஸ் அலவ்’ பண்ணிட்டார். நான் கொண்டுவந்த தீர்மானத்தை நான் கொண்டு வந்த தலைவரே அனுமதிக்க மறுத்துட்டார். எதிரிங்ககிட்டேருந்தும் எனக்கு அடி. என் ஆளுகிட்டேருந்தும் அடி. ஆக, ரெண்டு பக்கத்திலேருந்தும் அடி.''
''ரொம்பச் சங்கடம்தான்!''
''ஆனாலும் தீர்மானத்தை விட்டுடலே... ஓபன் மகாநாட்டிலே கொண்டுவர்றதுக்குப் பாடுபட்டேன். ஓபன் மகாநாட்டிலே தீர்மானத்தை எடுத்துக்கணும்னா, அம்பது பேர் கையெழுத்து வேணும்னாரு. அம்பது என்ன? இந்தா எழுபத்தைந்து கையெழுத்துனு சொல்லிக் கையெழுத்தும் வாங்கிட்டுப் போனேன். திரு.வி.க., பயந்துபோய் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்துட்டார். எனக்குக் கோவம் வந்துட்டுது. 'முதலியாரே! உங்களை யோக்கியன்னு நினைச்சேன். 'கையெழுத்து வாங்கிட்டு வா’னு சொல்றப்போ சொந்த புத்தி, இப்ப வேற புத்தியா?’னு கேட்டுட்டு, இப்படித்தான் துண்டை எடுத்து தோள் மேலே போட்டுக்கிட்டு (பக்கத்திலுள்ள டவல் ஒன்றை எடுத்துத் தோள் மீது போட்டுக்கொள்கிறார்.) வெளியே நடந்துட்டேன்.
அப்புறம் எல்லாருமாப் பஞ்சாயத்துக்கு வந்தாங்க. காங்கிரஸ்காரங்க போக்கு எனக்குப் பிடிக்கலே. வெளியே வந்துட்டேன். ஆனா, அதுக்கப்புறமும் கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்காரனாத்தான் இருந்தேன். அப்படி இருந்துக்கிட்டே காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் பண்ணினேன். காங்கிரஸை எதிர்த்தாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாதகமா இல்லே.''
''உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பது சரினு நினைக்கிறீங்களா? திறமையைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கட்டுமே...'' - மணியன் கேட்கிறார்.
பெரியாருக்குக் கோபம் வந்துவிடுகிறது.
''என்ன திறமை வேண்டியிருக்குது? வெங்காயம்! ஜெயிலுக்குள்ளே போய்ப் பாருங்க. ஜாதிக் கணக்குப்படித்தானே அங்கேயும் இருக்காங்க. பார்ப்பன ஜாதி கொஞ்சம் குறைச்சலா இருக்கும். அதுக்குக் காரணம் என்னன்னா, அவன் கொஞ்சம் பயந்தவன். கொலை, கொள்ளைக்குப் போவ மாட்டான். அவ்வளவுதானே? மத்தப்படி ஜாதி விகிதாசாரப்படிதானே ஜெயில்லயும் இருக்காங்க? ஆனபடியாலே சர்க்கார் உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதிலேயும் ஜாதி விகிதாச்சாரம் இருந்துட்டுப் போவட்டுமே...''
''காங்கிரஸை விட்டு விலகினீங்களே... அப்புறம் என்ன ஆச்சு?''
'' 'கம்யூனல் ஃபீலிங்’ வளர ஆரம்பிச்சது. சி.என்.முத்துரங்க முதலியார், சி.பி.சுப்பையா, காமராஜ் இவங்களை வெச்சு காங்கிரஸை வளர்த்துட்டாங்க...'' சட்டென்று நண்பர் மணியன் பக்கமாகத் திரும்பி ''நீங்க என்னமோ கேட்டீங்களே? ஆமா... வைக்கம் சங்கதி... சொல்றேன், கேளுங்க...'' என்கிறார்.
காலை நாங்கள் பெரியார் மாளிகைக்குள் சென்றபோது மணி ஒன்பதரை இருக்கலாம். அப்போது அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். எங்களுடன் பேசி முடிக்கும்போது மணி இரண்டு. அந்த இடத்தில் எப்போது உட்கார்ந்தாரோ தெரியாது. எங்களுடன் பேசி முடிக்கும் வரை அப்பால் இப்பால் நகரவில்லை. இடையில் காபி கொண்டு வந்து வைக்கப்பட்டபோதுகூட ''ஐயா! காபி ஆறிப்போறது'' என்று ஞாபகப்படுத்திய பின்னரே அதை எடுத்து அருந்தினார்.
இதற்குள் நான் இருபது முறை கால்களை மாற்றிப் போட்டுக்கொண்டேன். பின்பக்கம் சாய்ந்தேன். முன்பக்கம் சாய்ந்தேன். முகத்தை இடது கையினால் தாங்கிக்கொண்டேன். எத்தனைவிதமான கோணங்களில் உட்கார முடியுமோ, அப்படியெல்லாம் மாறி மாறி உட்கார்ந்தேன்.
பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த இடத்திலும் நிலைத்து உட்கார முடியாதவர் நண்பர் மணியன். அவர் நான்கு முறை எழுந்து நின்றார். இரண்டு முறை டெலிபோனில் பேசிவிட்டு வந்தார். கைகளைச் சொடுக்கினார். கால்களை நீட்டினார். இப்படி ஏதேதோ தேகப் பயிற்சிகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். சற்றும் சோர்வின்றி, அலுக்காமல், சலிக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த பெரியாரின் அதிசய சக்தியைப் பற்றி நான் மனதுக்குள் வியந்துகொண்டிருந்தேன். பெரியார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்:
''வைக்கம் என்கிற ஊர் கேரளாவிலே இருக்குது. அந்த ஊரிலே ஒரு தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க யாரும் நடக்கக் கூடாதுனு ரொம்ப நாளாக் கட்டுப்பாடு. இந்தப் பக்கத்துலே உள்ளவங்க குடிதண்ணீர் கொண்டுவரணும்னா, குறுக்கே உள்ள அந்தத் தெருவைத் தாண்டித்தான் போய் வரணும்.''
''வேற வழி இல்லையா?''
''வேறொரு தெருப் பக்கமாகவும் போகலாம். ஆனால், அது சுத்து வழி. 'ஜாதிப் பேரால நடக்கிற இந்த அக்கிரமத்தை ஒழிச்சுடணும், தெருவிலே நடந்துபோறதுக்கு எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்கிறதுதான் போராட்டம். அந்தப் போராட்டத்தை ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட நம்பூதிரி இவங்கள்லாம் நடத்தினாங்க. திருவாங்கூர் சர்க்கார் அவங்க எல்லோரையும் புடிச்சு ஜெயில்லே போட்டுது. போராட்டம் கலகலத்துப்போச்சு. எனக்கு லெட்டர் போட்டாங்க. யாரு? ஜார்ஜ் ஜோசப்பும் நீலகண்ட நம்பூதிரியும். நீங்க உடனே வைக்கத்துக்கு வந்து போராட்டத்தை ஏற்று நடத்தினால்தான் எங்க மானம் மிஞ்சும், கால தாமதம் செய்யாமல் புறப்பட்டு வரணும்னு ஜெயிலுக்குள்ளேயிருந்து லெட்டர் எழுதி அனுப்பிச்சாங்க.
அப்ப எனக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும், உடனே புறப்பட்டுப் போய்ப் போராட்டத்தை நடத்தினேன். ரொம்பப் பேர் என்னோடு சேர்ந்து வந்தாங்க. மலையாளத்துக்காரங்களும் வந்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும் வந்தாங்க. போராட்டம் வலுவடைஞ்சுது. நான் ரெண்டு முறை ஜெயிலுக்குப் போனேன். கடைசியிலே சத்தியாக்கிரகம் வெற்றி அடைஞ்சுது. அதோடு அந்தத் தெரு வழியா எல்லோரும் நடக்கலாம்னு ஆயிட்டுது.''
வைக்கத்திலே உள்ள கோயில், கோயிலுக்குப் பக்கத்திலே உள்ள அந்தத் தெரு, குடி தண்ணீருக்குச் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இன்னொரு வழி இவ்வளவையும் ஒரு காகிதத்தில் 'பிளான்’ போட்டுக் காட்டுகிறார் பெரியார்.
''ரெண்டு முறை எதுக்கு ஜெயிலுக்குப் போனீங்க?''- நான் கேட்கிறேன்.
''முதல் முறை ஒரு மாசம் போட்டாங்க. இருந்துட்டு வெளியே வந்தேன். அப்புறம் கேரளாவுக்குள்ளேயே கால் வைக்கக் கூடாதுனு தடை போட்டாங்க; மீறினேன். மறுபடியும் தண்டனை கொடுத்து திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில்ல கொண்டுபோய்ப் போட்டாங்க...''
''அண்ணாதுரை உங்க கட்சியிலே எப்போது சேர்ந்தார்னு சொல்ல முடியுமா?'' மணியன் கேட்கிறார்.
''பொப்பிலி ராஜாகிட்டே கணக்கு எழுதிட்டிருந்தாரு. என்கிட்டே வந்தாரு. இருக்கச் சொன்னேன். கூட்டத்துக்கெல்லாம் கூடவே வருவாரு. ஒருநாள் எழுந்து பேசினாரு. இப்படியே பேசிப் பேசித் தலைவனாயிட்டாரு...'' ('விடுங்க, இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்’ என்ற பாவனை பெரியார் முகத்தில் தெரிகிறது.)


'ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?''
''முப்பத்தேழுலே நடந்த எலெக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப்போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்திரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டுவந்தாங்க. நான் எதிர்த்தேன். புரொகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரி போட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஜஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.''
''அப்புறம் எப்ப ஜெயில்லருந்து வந்தீங்க?''
''அஞ்சாறு மாசத்துக்கெல்லாம் என்னை விட்டுட்டாங்க. ஆனா, இந்தியை மட்டும் விடாம வெச்சுட்டிருந்தாங்க...''
''எப்பத்தான் விட்டாங்க?''
''இதுக்குள்ளே காங்கிரஸிலேயே தகராறு. 'பட்டாபி சீதாராமய்யா தோல்வி, என் தோல்வி’னு காந்தி சொன்னாரே ஞாபகம் இருக்குதா? அந்தத் தகராறுதான். தலைவர் தேர்தல்ல பட்டாபி தோத்துட்டாரு... சுபாஷ் போஸ் ஜெயிச்சுட்டாரு. போஸ் கட்சியைச் சேர்ந்தவங்க, 'காங்கிரஸுக்குப் பதவி மோகம்’னு சொன்னாங்க. கொஞ்ச நாளைக்கெல்லாம் ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்யவேண்டி வந்துட்டுது. அந்தச் சமயத்திலே கவர்னர் என்னைக் கூப்பிட்டு 'மந்திரிசபை’ அமைக்கச் சொன்னாரு.
சீமையிலே இப்படித்தான் வழக்கம். ஒரு கட்சி விலகிட்டுதுனா, அடுத்த பெரிய கட்சியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லுவாங்க. இப்ப காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி, ஜஸ்டிஸ் கட்சிதான், 'நீ என்ன சொல்றே?’னாரு. நான் 'மாட்டேன்’னேன். மந்திரிசபை அமைச்சா, அத்தோடு ஜஸ்டிஸ் கட்சியே போயிடும். வேண்டாம்னு வந்துட்டேன். சண்முகம் செட்டி, குமாரராஜா, பன்னீர்செல்வம் எல்லாரையுமே கூப்பிட்டுப் பேசினாரு கவர்னர்.''
''அவங்களெல்லாம் என்ன சொன்னாங்க?''
''அவங்கள்ல சில பேருக்கு ஆசைதான். எங்களுக்குள்ளே விவாதம் நடந்தது. 'ஜஸ்டிஸ் கட்சிக்கு நோ எலெக்ஷன்; நோ மந்திரிசபை... இதுதான் என் கொள்கை’ன்னேன். எல்லோரும் அப்போஸ் பண்ணாங்க. என் மேலே ரொம்பக் கோவம் அவங்களுக்கு. சௌந்தரபாண்டியன்கூட 'ஏன் இப்படி முரட்டுத்தனமா இருக்கீங்க?’னு கேட்டாரு.''
''நீங்க என்ன சொன்னீங்க?''
'''என்னைத் தலைவனாப் போட்டதுக்கு இதுதான் பலன்’னு சொன்னேன். 'வேணும்னா என்னைத் தோற்கடிச்சுடுங்க’ன்னேன். பன்னீர்செல்வத்துக்கு மட்டும் என்னை விட்டுடறதுல இஷ்டமில்லே. அவருக்குத் தெரியும், நான் இல்லாட்டி கட்சி ரொம்ப வீக்காப் போயிடும்னு...''
''உங்களை மந்திரிசபை அமைக்கச் சொன்னாரே, அவர் பேர் என்ன?''
''காளை மாடு, விவசாயம்னு சொல்லிக்கிட்டிருப்பாரே, ஒருத்தர்... யாரது?''
''லின்லித்கோ...''
''ஆ, லின்லித்கோ! அவனேதான். கிண்டிக்குக் கூப்பிட்டுப் பேசினான். நான் சொன்னேன், 'மந்திரிசபை அமைச்சா யார் யாருக்கு மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை அடிபட்டுப்போகும். 'முடியாது’ன்னேன். அப்புறம் வேவல்கூட என்னைக் கூப்பிட்டு சம்மதிக்கச் சொன்னாரு. 'முடியவே முடியாது’ன்னுட்டு வந்துட்டேன். அப்புறம்தான் ரொம்ப முக்கியமான சங்கதி ஒண்ணு நடந்தது... கவனிக்கணும்.''
''சொல்லுங்க...''
''ராஜாஜி வந்தாரு. மெதுவா எங்கிட்டே வந்து, 'நாயக்கரே, நல்ல சமயம்... கஷ்டப்பட்டுப் பிடிச்ச சர்க்காரை வெள்ளைக்காரன்கிட்டே விட்டுடக் கூடாது. நீங்க மந்திரிசபையை ஒப்புக்கணும். நிலைச்சு நிக்கும்; கவலைப்படாதீங்க. வேணுமானா காந்தி, காங்கிரஸ் எல்லார்கிட்டேயும் நான் சம்மதம் வாங்கித் தர்றேன். இதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்களும் இஷ்டப்பட்டா, என்னையும் ஒரு மந்திரியாச் சேர்த்துக்குங்க; நானும் உங்ககூட இருந்து பக்க பலமா வேலை செய்யறேன்’னாரு...''
''ராஜாஜிக்கு என்ன பதில் சொன்னீங்க?''
'' 'நீங்க சொல்றதுலே சந்தோஷம்தான். ஆனா, யார் யாரோ சொல்லியும் மாட்டேன்னுட்டேன். இப்ப நீங்க சொல்றதுனாலே யோசனை பண்ணிப் பாக்கறேன்’னேன். 'நல்லா யோசிச்சுச் சொல்லுங்க’னு போயிட்டாரு. எங்க ஆளுங்களோட யோசிச்சேன். முதல்லே மந்திரிசபையை ஒப்புக்கணும்னு சொன்ன ஆசாமிங்க எல்லாம், ராஜாஜி மந்திரிசபைக்கு வர்றார்னு சொன்னதும் 'வேணவே வேணாம்’னுட்டாங்க''
''அப்புறம் என்ன நடந்தது?''
''ஒரு வேடிக்கை நடந்தது. என்ன வேடிக்கைனா... வாருக்கு அப்புறம் வெள்ளைக்காரன் பவரை ஹேண்ட்ஓவர் பண்றப்போ, நான் போய்க் கேட்டேன்... 'நாங்க பாடுபட்டோம், சர்க்காரோடு ஒத்துழைச்சோம். கடைசியிலே பவரை அவங்க கையிலே கொடுக்கிறது என்ன நியாயம்?’னு கேட்டேன்.''
''வெள்ளைக்காரன் அதுக்கு 'வி நோ ஹிண்டு அண்டு முஸ்லிம் ஒன்லி. ரெண்டே ரெண்டு பார்ட்டிதான் எங்களுக்குத் தெரியும். பிராமின்-நான்பிராமின் இந்த விஷயமெல்லாம் தெரியாது’னு பதில் சொல்லிட்டான்.''
''அதோடு நீங்க திரும்பி வந்துட்டீங்களா?''
''வருவேனா? 'இதுதான் வெள்ளைக்காரன் யோக்கியதையா?’னு கேட்டேன்.''
''என்ன பதில் சொன்னாங்க?''
''என்னத்தைச் சொல்லுவான். சிரிச்சு மழுப்பிட்டான். சரி... இத்தோட விட்டுடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக, பம்பாய் போயிருந்தேன். அவரைக் கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்றதையெல்லாம் கவனமாக் கேட்டுக்கிட்டு 'சரி, நான் மெட்ராஸுக்கு வர்றப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்’னு சொன்னாரு.''
''அப்பறம் ஜின்னா வந்தாரா?''
''வந்தாரு. 'உன் கட்சி விஷயம் என்னா?’னு கேட்டாரு. 'என் கட்சியிலே முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி. ஆனா, ஆல் நான்பிராமின்ஸ்’னேன். ஜின்னா சிரிச்சுட்டு, 'என்ன நினைச்சு இப்படி ஒரு கட்சி வெச்சிருக்கீங்க? நல்ல கட்டில்தான். ஆனா, கால் இல்லாக் கட்டிலாயிருக்குதே’ன்னு கேலி பண்ணாரு.
'என்ன செய்யறது? எப்படியோ இதைத்தான் ஒரு கட்டிலா வெச்சு ஓட்டிட்டிருக்கோம்’னேன்.''
''ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?''
'' 'உன் பிரச்னையைத் தனியாவே எடுத்துச் சொல்லிக்கோ’னுட்டுப் போயிட்டாரு. 'அப்பத்தான் ராமசாமி மூஞ்சியிலே ஜின்னா கரியைப் பூசிட்டார்’னு பத்திரிகையிலே எழுதினாங்க.''
''52-லே ஜெனரல் எலெக்ஷன் நடந்ததே, அப்ப நீங்க யாரை ஆதரிச்சீங்க?''
''காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் செஞ்சேன். காங்கிரஸ் தோத்தது. நல்லபடியாத் தோத்தது. மந்திரிசபை அமைக்கிறாப்ல எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கலே. மறுபடியும் ராஜாஜி வந்தாரு. படையாச்சி, கவுண்டரு எல்லாரையும் சரிபண்ணிக்கிட்டு மந்திரிசபை அமைச்சாரு. குலக் கல்வி, ஒரு நேரப் படிப்புன்னாரு. 6,000 பள்ளிக்கூடங்களை மூடினாரு. எதிர்த்தோம்... அதுக்குப் பின்னாலதான் காமராஜ் முதல் மந்திரியா வந்தாரு. தமிழர் நலனுக்காக நல்ல காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு. அதிலிருந்து வெளிப்படையா நான் காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டேன்.''
''காமராஜை நீங்க எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா?''
''எப்பவோ ஒரு சமயம் நான் ஜெனரல் ஆஸ்பத்திரியில படுத்திருக்கப்போ, அவராகவே வந்து 'எப்படி இருக்கீங்க?’னு விசாரிச்சாரு. அந்த நேரம் சி.சுப்பிரமணியமும் அதே ஆஸ்பத்திரியிலே படுத்திருந்தாரு. அவரைப் பார்க்க வந்தப்போ, என்னையும் பார்த்துட்டுப் போனாரு.''
''அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?''
காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், ''அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?''
''இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...''
''எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?''
''ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?''
''நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?''
''மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...''
''படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க 'சர்வே’ படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே, நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே... இது லாபம்தானே?''

Thursday, January 16, 2014

தகவல் அறியும் உரிமை சட்டம்- சவாலும் எதிர்பார்ப்பும்



திரிவேணி ஒரு ஏழைப்பெண். கிழக்கு டெல்லி குடிசைப்பகுதி ஒன்றில் வசிப்பவர். பரம ஏழைகளுக்கான அந்த்யோதயா அட்டை அவரிடம் உள்ளது. இதை எடுத்துக் கொண்டு எப்போது சென்றாலும் நியாய விலைக்கடையில் இவருக்கு உணவு தானியம் கிடைப்பதே இல்லை. கடை மூடப்பட்டிருக்கும் அல்லது கடைக்காரர் ""ஸ்டாக் தீர்ந்துவிட்டது'' என்பார். ஆறு மாதங்களாக இதே நிலை.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இவர் மனு சமர்ப்பித்தார். தனது நியாய விலைக்கடையில் எவ்வளவு தானியம் தனது பெயருக்கு வழங்கப்பட்டது என்ற விபரமும் இதற்கான ரொக்க ரசீதுகள், நகல்களும் தேவை என்று அவர் கோரியிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின் அவருக்கு பதில் வந்தது. கடந்த 3 மாதங்களில் மாதத்திற்கு கிலோ 2 ரூபாய் வீதம் 25 கிலோ அரிசியும் கிலோ 3 ரூபாய் வீதம் 10 கிலோ கோதுமையும் வழங்கப் பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரொக்க ரசீது களில் இவரது பெருவிரல் ரேகை பதியப்பட்டிருந்தது. ஆனால், திரிவேணி 10-வது வகுப்பு படித்தவர். கையெழுத்துதான் போடுவார்; கைநாட்டு போட மாட்டார். எனவே ரசீதில் இருந்தது இவரது கட்டைவிரல் கைரேகை அல்ல, போலிக் கைரேகை. கடைக்காரர் இவர் பெயரில் பல மாதங்களாக உணவு தானியங்களை அதிக விலைக்கு யாருக்கோ விற்று வந்திருக்கிறார் என்பது தெளிவானது. திரிவேணிக்கு அதிர்ச்சி. அவரிடம் கடைக்காரருக்கு எதிரான அத்தாட்சிகள் உள்ளன. அவர் நடவடிக்கை  எடுக்குமுன் கடைக்காரர் அவரிடம் வந்து தன்னை மன்னிக்கும்படியும் இனிமேல் தவறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்றும் கெஞ்சினார். அதன் பிறகு திரிவேணிக்கு சரியான விலையில் சரியான அளவுகளில் நியாய விலைக்கடையில் தானியம் கிடைக்கிறது.

இதேபோல நன்னு என்பவர் தினக்கூலி. கிழக்கு டெல்லியின் மற்றொரு குடிசைப் பகுதியில் வெல்கம் மஸ்டூர் குடியிருப்பில் வசிக்கிறார். ஜனவரி மாதம் தனது குடும்ப அட்டை தொலைந்துபோனதால் புதிய அட்டை கோரி மனு செய்தார். பின்னர் 3 மாத காலம் உள்ளூர் உணவு அலுவலகம் உணவு பொருள் வழங்குத் துறை என அலைந்தார். ஆனால் எழுத்தர்களும் அதிகாரிகளும் இவரை ஏரெடுத்துக்கூட பார்க்க வில்லை; பின்னர் இவருக்கு புதிய அட்டை வழங்குவதெப்படி? இவரது மனுவின் நிலை என்ன? பதில் இல்லை. கடைசியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அவர் மனுச் செய்தார். தனது குடும்ப  அட்டை மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? இம்மனுவைப் பரிசீலனை செய்ய வேண்டிய அதிகாரிகள் எழுத்தர்கள் யார் யார்? இவர்கள் மீது காலதாமதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பவையே இவர் கேட்ட தகவல்கள். தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுக்கொடுத்த ஒருவாரத்தில் உணவுத்துறை அலுலவர் ஒருவர் நன்னுவைத் தேடி வந்தார். அவருக்கு குடும்ப அட்டை தயாராக இருக்கிறது என்றும், அதனை அவர் அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். அடுத்த நாள் நன்னு அலுவலகத்திற்கு சென்றபோது அவருக்கு அன்பான வரவேற்பு. தேநீர் கொடுத்து உபசாரம். கூடவே ஒரு வேண்டுகோள். குடும்ப அட்டைதான் கிடைத்துவிட்டதே மனுவை விலக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அது. வரவேற்று உபசரித்து வேண்டுகோள் விடுத்தது வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலரேதான்.

இந்த இரு நிகழ்வுகளும் விதி விலக்குகள் அல்ல. டெல்லி அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமல்படுத்திய பிறகு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சாதாரணமாக திரிவேணி மற்றும் நன்னு போன்ற ஏழை மக்களுக்கு என்னதான் வழியிருந்தது? அரசு அதிகாரிகளிடம் புகார் கூறலாம். ஆனால் திரிவேணி சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்; நன்னு சொல்வதையும்தான்.

அரசு நிர்வாகத்திற்குள் அரசு அதிகாரிகளைப் பொறுப்பாக்கும் எந்த அமைப்பு முறையும் இல்லை. தங்களுக்கு ஏதும் ஆகாது என்பது அதிகாரிகளுக்குத் தெரியும். அவரது திறமையின்மையும் ஊழலும் கண்டுபிடிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகமிக அரிது. எனவே அவர்கள் தங்கள் போக்கில் தொடருகிறார்கள். ஊழல்  என்பது ஊழல் அதிகாரிகளைப் பொறுத்தவரை ஒரு வியாபாரம் என்கிறார் முன்னாள் மத்திய தலைமை கண்காணிப்பு ஊழல் தடுப்பு அலுவலர் என். விட்டல். இந்த ஊழல் வியாபாரத்தில் ஆபத்து அபாயம் ஏதுமில்லை. இதில் மாற்றம் தேவை எனில் அரசு ஊழியர்களின் பொறுப்பேற்கும் தன்மை சித்தரிக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நடவடிக்கையை எடுக்க வகைசெய்கிறது. இதுவரை கோப்புகளிலும் ஆவணங்களிலும் பதிவேடுகளிலும் ஒளிந்திருந்த ஊழல், திறமையின்மை ஆகியவற்றிற்கெதிரான அத்தாட்சிகள் இதனால் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை காரணமாக திரிவேணி போன்ற எளிய பிரிவு மக்களுக்கு நியாய விலைக்கடைக்காரர் போன்றோருக்கு எதிரான அத்தாட்சிகள் கிடைத்து விடுவதால்  அவர்களுக்கும் கடைக்காரர் போன்ற அதிகாரி களுக்குமிடையே நிலவிய உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திரிவேணி விரும்பியிருந்தால் கடைக்காரர் உரிமத்தை ரத்து செய்து விடமுடியும். இதேபோல நன்னு தனது புகார் பற்றிய நிலவரத்தை அறிய இச்சட்டத்தைப் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் திறமையின்மையை எழுத்துபூர்வமாக ஏற்கின்றனர். தமது புகார் மீது பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்கும் அதிகாரிகள் பெயரை நன்னு கேட்டபோது அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தவறிழைத்த அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் வெகுவாக உயர்ந்து விட்டன. இது இதுவரை இல்லாத வாய்ப்புதானே.


ஏழைகளுக்கான ரேஷன் பொருட்களை வெளியே விற்று லாபம் சம்பாதிக்கும் நியாய விலைக் கடைக்காரர் களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க டெல்லி அரசு நீண்டகாலமாக மறுத்து வந்துள்ளது. டெல்லியில் பெரும் பகுதிகளில் பொது வினியோக முறையானது கோப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சிலபகுதிகளில் மக்கள் ரேஷன் கடையில் தானியம் ஏதும் பெறவேயில்லை. இந்த கடைக்காரர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளிக்கொணர்ந்து இந்த மக்களிடம் காட்டியபோது அவர்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர். நியாய விலைக்கடைக்காரர் குடும்ப அட்டை வைத்திருப்போர் கையெழுத்துக்களை அவர்களே போட்டு பொருட்களை விற்று விடுகின்றனர். டெல்லியில் அனைத்து ரேஷன் கடைக்காரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் கையெழுத்துக்களையும் போட்டு ஏமாற்றி வருகின்றனர். இவ்வளவு தடயங்கள் இருக்கின்றன. அரசு இவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து முன்னுதாரணமாக திகழ இவை எல்லாம் வாய்ப்புகள். ஆனால் உணவுத்துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தானோ என்னவோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இக்கடை களில் சரக்கு இருப்பு கணக்குகளுடன் பொருந்துவதில்லை. இந்தக் கடைகளில் ஆய்வு என்பது நடைபெறுவதேயில்லை.

மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஆவணங்களைப் பெற்று அரசிடம் அசைக்க முடியாத அத்தாட்சியுடன் புகார் செய்தாலும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுக்கிறது.

இங்கு பிரச்சினை ரேஷன் பொருட்கள் தொடர்புடையது மட்டுமே அல்ல. அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் இதேநிலை உள்ளது. சமுதாயத்தின் அனைத்துக் தரப்பிலும் உள்ள சக்தி வாய்ந்தவர்கள் சட்ட விரோத செயல்கள் மூலம் தங்கள் சுயநலங்களை பாதுகாக்க ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகின்றனர். கருத்து வேறு பாடுகளும், சண்டைச் சூழ்நிலையும் இந்த இடங்களில் தயாராக உள்ளன. சுரண்டல்காரர்கள் ஒருபுறம், சுயநலமி களும், சக்திவாய்ந்த ரவுடி கும்பல்கள் மறுபுறம் இந்தக் கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவர்கள் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஆதரவுடன் தங்கள் சட்டவிரோத செயல்களை தொடருகின்றனர். சட்டம்-ஒழுங்கை அமல்படுத்த வேண்டிய இந்த அமைப்புகள் அராஜக செயல்களை கண்டு கொள்ளாமல் இவர்களுக்கு எதிராக ஆய்வுகளை மேற்கொள்பவர்களை தடுத்து இடையூறு செய்கின்றனர்.

மறுபக்கம் ஏழைகள், எழுத்தறிவற்றோர் மற்றும் ஆதரவற்றோர் இதனால் தொடர்ந்து தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் நடவடிக்கைகளை சுயநலக்காரர் களுக்கும், அவர்களுக்கு துணை போவர்களும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் என எதிர் பார்க்கக் கூடாது. அவர்கள் திருப்பித்தாக்கத்தான் செய்வார்கள். காவல் துறையினரோ, அரசு முகமைகளோ இவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்காமல் போகலாம். வருங்காலங்களில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தகவல் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் கேட்டவுடனேயே தகவல் தரப்படும் என மக்கள் எதிர்பார்க்க முடியாது. அலுவலர்களில் பலத்த எதிர்ப்பு இருக்கும். ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தகவல் தர மறுப்பார்கள். எனவே தேவைப்பட்டால் மக்கள் மேல் முறையீடு அமைப்புகளை அணுகத் தவறக்கூடாது. இல்லாத தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பொது மக்கள் குறைதீர்க்கும் ஆணையம் (டஏஈ) இத்தகைய அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய அதிகாரி களுக்கு அபராதம் விதித்து அதனை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் அதிகாரத்தை நிர்வாக ஆணை மூலம் டெல்லி அரசு பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆணையம் (டன்க்ஷப்ண்ஸ்ரீ ஏழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங்ள் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய்)லி டஏஈலிக்கு சுமார் 1300-க்கு மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்ட மீறல் சார்ந்தவைகளே. இவற்றில் 70% மேற்பட்டவை மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளில் பெற்றவை எனில் மக்களின் குற்றச்சாட்டு உண்மையானது என்று பொருள். ஆனால் இதுவரை ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் எவருக்கும் எதிரான தண்டனை விதிக்க தயாராக இல்லை. இதனால் தகவல் தரா விட்டாலும் தங்களுக்கு ஒன்றும் நேராது என்று அதிகார வர்க்கம் எண்ணம் கொண்டுள்ளது.

பி.ஜி.சி. தலைமைப் பதவியில் வழக்கமாக முன்னாள் அரசு தலைமைச் செயலர்களே இருந்து வருகின்றனர். ஓய்வு பெற்றவுடன் தலைமைச் செயலர் இப்பதவிக்கு வருகிறார். இதனால் அவரது செயல்பாட்டில் குழப்பம் நேருகிறது. தான் அரசின் உயர்ந்த பதவியான தலைமைச் செயலர் பதவியில் இருந்தபோது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல் தர வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

இதிலிருந்து அறியும் பாடம் என்ன? மத்திய மாநில அரசுகள் தகவல் ஆணையர்களை நியமிக்கும்போது உள் நோக்க குறுக்கீடுகள் ஏற்படாத நிலையில் உள்ள அதிகாரிகளையே அப்பதவியில் நியமிக்க வேண்டும்.

தகவல் கேட்பதற்கு பதிலாக தகவலை கேட்பு ஏதுமின்றி அளிப்பதுமுழுமையான வெளிப்படைத்தன்மை நோக்கி அரசு தானாகவே நடைபோட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மக்கள் தகவல் கேட்டுப் பெறுவதற்கு பதிலாக அரசு தானே முன்வந்து மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தகவல்களை கேட்பு ஏதுமின்றி வழங்க வேண்டும். தற்போதைய டெல்லி உணவுத்துறை ஆணையரின் நடவடிக்கை இதில் முன்னுதாரணம் எனலாம். நியாய விலைக்கடைகளின் ஆவணங்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டுமென அவர் ஆணையிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைபெறும் சட்டப்படி எந்த மனுவும் எவரும் அளிக்க வேண்டியதில்லை. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை எவர் வேண்டுமானாலும் எந்த ஆவணத்தை வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

இத்தகைய நடவடிக்கைகள் அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது நியாயமான பொறுப்பு உள்ள அரசுக்கு தேவைதான். ஆனால் இது மட்டும் போதாது மேலும் பல விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். எனினும் தகவல் பெறும் உரிமை சட்டம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் உறுதியான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

பாரத ரத்னா நெல்சன் மண்டேலா







னத்தின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, சற்றும் தளராமல் தன் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போராளி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சென்ற நூற்றாண்டின் கடைசி அறவழிப் போராளியான அவரை இந்த நூற்றாண்டில் உலகம் இழந்துவிட்டது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் மாகாணத்தில் உம்டாடா பகுதியில் உள்ள மெவிசோ கிராமத்தில் 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவரது அப்பா, காட்லா. அம்மா, நோஸ்கெனி. பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், ரோபிசலா மண்டேலா. ரோபிசலா என்றால் கலகக்காரர் என்று அர்த்தம். பின்னாளில், அவர் உரிமைகளைப் பெறுவதற்கான கலகத்தில் ஈடுபட்டு உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார்.

மண்டேலாவின் முன்னோர்கள் அப்பகுதி மக்களின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்கள். அதனால், ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தனர் மண்டேலா குடும்பத்தினர். ராஜ வம்சத்தினர் கையில் நிலப்பகுதி இருந்தாலும் அவர்களையும் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவையும் வெள்ளைக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர்.


இந்தியாவிலிருந்து வழக்கறிஞராக தென்னாப்பிரிக் காவுக்குச் சென்ற காந்தியடிகள், அங்கு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தபோது, அவர் கருப்பு நிறத்தவர் என்பதால் வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே தள்ளியதையும் இதனையடுத்து நிறவெறிக்கெதிராக காந்தியடிகள் தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியதையும் அறிவோம். அவருடைய போராட்டத்தினால் தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர்களாக இருந்த ஆயிரக்கணக்கான இந்திய குடும்பத்தினருக்கு உரிமைகள் கிடைத்தன.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைவிட அதிகமான கொடுமைகளை அந்நாட்டின் பூர்வகுடிகளான கறுப்பின மக்கள் அனுபவித்து வந்தனர்.  அவர்களை அடிமைகள்போல வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்தனர். மண்டேலாதான் அவரது குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிக்குச் சென்று படித்தவர். பள்ளியில் இருந்த ஆசிரியைதான் அவரது பெயருக்கு முன்பாக நெல்சன் என்பதைச் சேர்த்தார்.  அந்நாளில், தென்னாப்பிரிக்க மாணவர்களின் பள்ளிப் பதிவேட்டில் ஆங்கிலப் பெயர் இருக்கவேண்டும் என்கிற ஆதிக்க உத்தரவை வெள்ளைக்காரர்கள் விதித் திருந்தனர். அதனால்தான் மண்டேலாவின் பெயருக்கு முன்பாக நெல்சன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தங்கள் சொந்த அடையாளத்தைப் பெயரில்கூட காப்பாற்ற முடியாதவர்களாக தன் இன மக்கள் இருப்பதை பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்தார் மண்டேலா.  இரு சகோதரி களுடன் வளர்ந்த மண்டேலா, கிராமப்புறத்தில் கால்நடை களை மேய்ப்பார். சக வயது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார். தெம்பு அரண்மனையில் சட்ட-நிர்வாகப் பொறுப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் அவருக் கிருந்ததால், பள்ளிப்படிப்புக்குப் பிறகு தன் ஆர்வத்திற்கேற்ற உயர்படிப்புகளை நாடினார்.

பி.ஏ. பட்டம் பெற்றதுடன், தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்றார். கல்லூரி வாழ்க்கையின் போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் வால்டர் சிசுலுவுடன் மண்டேலாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதுபோல, கம்யூனிச இயக்கத்தவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், விளாடிமிர் இல்யீச் லெனினின் புரட்சிகர செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன. எனினும் தென்னாப்பிரிக்காவில் வர்க்க பேதத்தைவிட நிற-இன பேதமே சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதாக உணர்ந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவில் இணைந்து உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றார். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் வெள்ளை நிறத்தவர் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் எதிர்த்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராடிவந்தது.


இயக்கப்போராட்டத்தில் இணைந்திருந்த எவிலின் என்ற பெண்ணை 1944-இல் மண்டேலா திருமணம் செய்து கொண்டார். போராட்டக்களங்களில் தொடர்ந்து பங்கேற்றார். 1947-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவின் தலைவரானார். பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராகவும் இளம் வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. அவருடைய போராட்டங்கள் காந்தியடிகளைப் போல அறவழியில் அமைந்தன. பெருமளவில் மக்கள் திரண்டனர். இதனால் அவர் மீது தேசத்துரோக சதி குற்றச்சாட்டை சுமத்தி 1956-இல் கைது செய்தது தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு. நான்காண்டு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு  அந்த வழக்கை அரசு கைவிட்டது. இதனிடையே, அவருடைய திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டது. பின்னர், வின்னி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

1960-ஆம் ஆண்டில் வெள்ளையர்களுக்கு சிறப்பு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு முடிவு செய்ததை எதிர்த்த கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தினர். ஷார்ப்வில்லி நகரத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இனி, அறவழிப் போராட்டம் பலன் தராது என்ற முடிவுக்கு வந்த மண்டேலா ஆயுதப் போராட்டத்திற்குத் திரும்பினார்.  1961-இல் இனவெறிக்கு எதிரான முதலாவது ஆயுத தாக்குதல் மண்டேலா தலைமையில் நடந்தது. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. மண்டேலாவைப் பிடிக்க வெள்ளை அரசு தீவிரமானது. அவர் தலைமறைவானார். அவரைத் தேடுவது என்ற பெயரில் கறுப்பின மக்களைத் துன்புறுத்தியது அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மூலமாகவும் நெருக்கடிகள் உருவாயின. மண்டேலா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 1962-ஆம் ஆண்டு அவரது இருப்பிடத்தை, மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் உள்பட 10 முக்கிய தலைவர்கள் மீது புரட்சி, சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1963-இல் தொடங்கி 1964 வரை நடந்த இந்த விசாரணையின் முடிவில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, பாறைகளை உடைத்தல் போன்ற கடுமையான வேலை களுக்குட்படுத்தப்பட்டார். போராட்டத்தைக் கைவிட்டு, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. அதற்கு மண்டேலா மறுத்துவிட்டு சிறைவாசத்தைத் தொடர்ந்தார். 1964-லிருந்து 1982 வரை 18 ஆண்டுகள் அவர் அந்த சிறையில் அடைபட்டிருந்தார். 1982 முதல் போல்ஸ்மோர் சிறையிலும், 1988-லிருந்து விக்டர் வெர்ஸ்டர் சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் சிறைப்பட்டிருந்தபோதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. காந்திய வழியே தனது மக்களுக்கான  சிறந்த போராட்ட வழி என்பதை மண்டேலா உணர்ந்தார். அதன்படியே போராட்டங்கள் தொடர்ந்தன.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என உலகநாடுகள் அழுத்தமாகக் குரல் கொடுத்தன. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசுக்கு நெருக்கடி உருவானது. தென்னாப்பிரிக்க அதிபராக அப்போது          டி கிளார்க் இருந்தார். அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கினார். இதனைத் தொடர்ந்து 27 ஆண்டுகால சிறைவாசத்துக்குப்பிறகு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். விடுதலைப்போராட்டத்தில் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தலைவர் உலகில் வேறு யாருமில்லை.

1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக் காவில் மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது. அதில் மண்டேலா வெற்றிபெற்று அதிபரானார். முன்னாள் அதிபர் டி கிளார்க்கை துணை அதிபராக பதவியேற்கச் செய்ததுடன், அவரை அதிபர் மாளிகையில் தங்கவும் அனுமதித்தார் மண்டேலா. பகைவருக்கும் அருளும் நெஞ்சம் கொண்ட மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு அவருக்கும் டி கிளார்க்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது நம் நாட்டிற்கு வருகை தந்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அதிபரான மண்டேலா அந்நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்த்துவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப் பணிகளை மேற்கொண்டார். 1999-இல் மீண்டும் தேர்தல் வந்தபோது, இரண்டாம் முறையாக அதிபராக மாட்டேன் என்று சொல்லி கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். இதனிடையே வின்னியுடனான அவருடைய திருமண வாழ்க்கையும் முறிவு ஏற்பட்டு, கிரேசா என்பவரை மணம் செய்துகொண்டார் மண்டேலா.

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்கான அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்தன. எனினும் மிக நீண்டகால சிறைவாசம், அங்கு அனுபவித்த சித்ரவதைகள், அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் இவற்றின் காரணமாக மண்டேலாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் மரணமடைந்தார்.
மனிதகுலத்தின் விடுதலைக்கானப் போராட்டங்கள் ஓய்வதில்லை. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும் வரலாற்றிலிருந்து அழிவதில்லை.
Source:Pothu arivu ulagam

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து...




""நான்தான் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர். நான் இளங்கலைப் பட்டதாரி. ஜோகன்னஸ்பர்கில் வழக்குரைஞராக ஆலிவர் டாம்போவுடன் இணைந்து சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியே சென்றதற்காக குற்றம் சுமத்தப் பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். மேலும் தன் மீது மே 1961-ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்ததிற்கு அழைத்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளேன்.

நான் ஒன்றை முதலிலேயே கூறிவிட விரும்புகிறேன்.தென் ஆப்பிரிக்க அரசு இங்கு நடக்கும் போராட்டங்களை அயல்நாட்டுச் சக்திகள் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தூண்டுதல் என்று கூறுவதை மறுக்கிறேன். அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு தனி  மனிதனாகவும், எனது மக்களின் தலைவனாகவும் நான் என்ன செய்ததாகக் கூறப்பட்டேனோ அதை நான் செய்தேன். இவற்றை நான் ஏன் செய்தேன் என்பது எனது தாய்நாட்டில் நான் பெற்ற அனுபவம் காரணமாகவே தவிர ஏதோ அயல்நாட்டு செல்வாக்கினால், புறத் தூண்டுதல் களினால் அல்ல.

ட்ரான்ஸ்கீயில் நான் என் இளம்பிராயத்தைக் கழித்த போது எனது இனத்தின் மூத்தவர்கள், சான்றோர்கள் எனக்கு பழைய நாட்களைப் பற்றிய கதைகளைக் கூறியுள்ளார்கள். அதில் தங்களது சொந்த நாட்டைக் காப்பாற்ற எங்கள் மூதாதையர்கள் போராடியது பற்றிய கதைகளே அதிகம். டிங்கானே மற்றும் பாம்பட்டா, ஹின்ட்சா மற்றும் மாகானா, ஸ்குன்க்டி மற்றும் டலாசிலி, மொஷூஷூ மற்றும் செகுகுனி ஆகியோர்கள் இந்த ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாட்டிலும் அவர்களது செயல்களுக்காகக் கொண்டாடப்படுபவர்கள். அப்போது நான் யோசித்தேன், வாழ்க்கை எனக்கு இந்த தேசத்திற் காகவும் விடுதலைக்காகவும் வாய்ப்பை வழங்குமா என்று. இந்த வழக்கைப் பொறுத்தவரை என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைச் செய்ததற்கு நான் மேற்கூறிய சம்பவங்கள், கதைகள் தூண்டுகோலாக அமைந்தது.

இவற்றையெல்லாம் நான் கூறும்போது, வன்முறை என்ற விஷயம் பற்றி சற்று நீளமாகவே கூற விரும்புகிறேன். இந்த நீதிமன்றத்தில் கூறப்பட்ட சில விஷயங்கள் உண்மை. சில விஷயங்கள் பொய். ஆனால் நான் சதிக்குத் திட்டமிட்டேன் என்பதை மறுக்கப் போவதில்லை. ஆனால் நான் அதனை ஒரு அலட்சியப் போக்கினாலோ அல்லது வன்முறையை நான் நம்புகிறேன் என்பதாலோ மேற்கொள்ளவில்லை. ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறவெறி எங்கள் மக்கள் மீது செலுத்தும் வன்முறை, துரோகம், சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றை அமைதியான முறையில் யோசித்து  நிதானமாக திட்ட மிட்ட செயலாகும். சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் நாட்டில் எப்படி போராடாமல் இருக்க முடியும். போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை மனிதனை மதிக்காத மனித உரிமை மீறல் தான் எங்களை போராட தூண்டுகின்றது. இதற்காக துவங்கப் பட்ட அமைப்பு உருவாக நான் ஒரு அங்கமாக இருந்தேன். இதற்காக ஆகஸ்ட் 1962-இல் நான் கைது செய்யப்பட்டேன்.

முதலில் இந்த அரசின் கொள்கையினால், ஆப்பிரிக்க மக்கள் வன்முறையின் பாதையை தேர்வு செய்வது என்பது தடுக்க முடியாததும் தவிர்க்க முடியாததும் ஆகி விடும். இதனால் ஏற்படும் வன்முறை பயங்கரவாதமாக மாறி இந்த நாட்டில் வாழும் பல இன மக்களுக்குள் கடும் காழ்ப்பும், மோதல் போக்கும், பகைமையும் உருவாகும். ஒரு போர்கூட இத்தகைய பயங்கரத்தை நிகழ்த்தமுடியாத நிலை உருவாகியிருந்ததை உம்காண்ட்டோ இயக்கம் பரிசீலனை செய்தது.
மேலும் வெள்ளை நிறவெறி மேட்டிமைக்கு எதிராக ஆப்பிரிக்க மக்களுக்கு வன்முறையைத் தவிர வேறு பாதைகளும் இல்லை என்பதையும் நாங்கள் ஆலோசித்தோம். வெள்ளை நிறவெறிக்கு எதிராக சட்ட பூர்வமாக கேள்விகள் எழுப்பும் போராடும் வடிவங்களை சட்டபூர்வமாகவே அரசு நசுக்கியது. இந்த நிலையில் ஒன்று நாங்கள் தொடர்ந்து கீழான இனம் என்ற  அடையாளத்தை ஏற்று அடங்கவேண்டும் அல்லது அரசை எதிர்த்து போராட வேண்டும்.

நாங்கள் இதனால் முதலில் சட்டத்தை உடைக்க முடிவு செய்தோம். அதாவது வன்முறைக்கு வித்திடாத வகையில் சட்டத்தை உடைக்க திட்டமிட்டோம். இந்தக் கொள்கையை அரசு கண்மூடித்தனமாக வன்முறையினால் ஒடுக்கிய போது நாங்கள் வன்முறைக்குப் பதில் வன்முறையே என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டோம். ஆனால் இந்த வன்முறை பயங்கரவாதம் அல்ல.

உம்கான்ட்டோ இயக்கத்தை ஆரம்பித்த நாங்கள் அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர் களே. இதன் பின்னணியில் அகிம்சை என்ற பெரிய மரபு உள்ளது. பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது எங்கள் கொள்கை. தென் ஆப்பிரிக்கா இங்கு வாழும் அனைவருக்கும் உரித்தானது, ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. அந்தப் பிரிவு வெள்ளை இனமாக இருந்தாலும் சரி கறுப்பினமாக இருந்தாலும் சரி. இனப்போரை நாங்கள் விரும்பவில்லை கடைசி வரை எங்கள் கொள்கையும் மார்க்கமும் இதுதான். இதன் மீது அரசிற்கு சந்தேகம் இருந்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் வரலாறு இதனை நிரூபிக்கும்.

1912-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க உரிமைகளை பாதுகாக்கத் தொடங்கப்பட்டதே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். ஆப்பிரிக்க மக்கள் உரிமைகள் தென் ஆப்பிரிக்க சட்டம் மூலம் பெரிதும் குறைக்கப்பட்ட காலம் அது. 37 ஆண்டுகள் அரசியல் சட்டப் போராட்டத்தை அது தாங்கிப்பிடித்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் ஆப்பிரிக்க மக்கள் நலனை காக்க அனைத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால் வெள்ளை அரசு துரோக மிழைத்துவிட்டது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸை நிறுவிய எங்கள் தலைவர் லுடுலியின் வார்த்தைகளை நான் இங்கு நினைவு கூறுகிறேன்.

"30 ஆண்டுகளாக பொறுமையாக, மிதவாத உணர்வுடன் நாங்கள் அதிகாரத்தின் கதவுகளை தட்டியதை யார் கேட்காமல் இருக்க முடியும். யார் மறுக்க முடியும்? அகிம்சை போராட்டத்தின் பலன்கள் என்ன? கடந்த 30 ஆண்டுகளாக பல சட்டங்கள் எமது மக்களின் உரிமைகளை காவு வாங்கியுள்ளது. இப்போது உரிமைகள் என்பதேயில்லை என்ற நிலையைத்தான் எட்டியிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் போராட்டங்கள் விரயமாகிவிட்டன.'

1949-க்குப் பிறகு கூட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வன்முறையைத் தவிர்க்க பெரிதும் முயன்றது. ஆனால் இந்தத் தருணத்தில்தான் சட்டத்திற்குட்பட்ட போராட்டங்கள் பற்றிய மாற்றங்கள் எங்களிடம் தோன்றியது. சில சட்டங்களுக்கு எதிராக அமைதியாக ஆனால் சட்டவிரோதமாக போராடத் துணிந்தோம். ஒத்துழையாமை இயக்கம் போன்ற ஒன்றைத் தொடங்கி னோம். 8,500 பேர் நிறவெறிக்கொள்கைகளை மீறினர், ஜெயிலுக்கு சென்றனர். ஆனால் இதில் வன்முறை என்ற ஒரு துளியைக் கூட காட்ட முடியாது.

நானும் 19 பேரும் இந்தப் போராட்டத்தை நடத்தியதற் காகக் கைது செய்யப்பட்டோம். ஆனால் நீதிபதி எங்கள் நடவடிக்கைகளில் வன்முறையை காணமுடியவில்லை. அகிம்சை போராட்டமே என்பதை தீர்ப்பின் மூலம் வெளியிட்டார். அப்போதுதான் செயல்வீரர்கள் குழுவை அமைத்தோம். ஆனால் கொள்கைகள் அதேதான், செயல்வீரர்கள் ஏதோ வெள்ளை இனத்திற்கு எதிராக அணி திரளும் கறுப்பர் ராணுவப்படை அல்ல. வெள்ளையர் களோடு சிவில் யுத்தம் நடத்துவது அவர்கள் குறிக்கோள் அல்ல. அவர்கள் இயக்கத்தின் ஜனநாயக நடவடிக்கை களையே மேற்கொண்டனர். அதற்காகவே தற்போது சாட்டையடி தண்டனை சட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

1960-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க குடியரசை அறிவிக்கும் தீர்மானம் அரசால் நிறைவேற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான, 70% மக்கள்தொகை கொண்ட கறுப்பரின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வெள்ளைக் குடியரசின் மீது எங்களுக்கு ஐயம் எழுந்து தேசத்தின் எதிர்காலம் என்னாவது என்ற கவலை எழுந்தது. அப்போதுதான் மாநாடு ஒன்றைக்கூட்டி நான் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தேன். வீட்டிலேயே இருப்பது என்ற அந்தப் போராட்டம் அமைதியான போராட்டம் ஆகும். வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஆனால் ஆப்பிரிக்க அரசு மீண்டும் மீண்டும் வன்முறையை மக்கள் மீது பயன் படுத்தியது. இதனால்தான் உம்கான்ட்டோ என்ற இயக்கம் உருவானது.

போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவெடுத்தோம். இதுவல்லாது மற்ற வழிமுறைகள் என்பது ஒரு இழிவான சரணாகதியாகவே முடிந்து விடும் என்பதை நாங்கள் அறிந்தோம். போராட்டம் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. ஆனால், தொடர்ந்து போராடுவது எப்படி என்ற கேள்வி எங்களிடம் இருந்தது. நிறவெறியல்லாத ஜனநாயகத்திற்காகவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பாடுபட்டுவருகிறது. ஆனால் 50 ஆண்டுகால அகிம்சை போராட்டம் என்ன சாதித்தது என்றால் மேலும் மேலும் ஒடுக்குமுறை சட்ட அமலாக்கங்களையே.

வெள்ளை நிறவெறிக்கு எதிராக போராடத் துணிந்த காலங்களிலிருந்தே மக்கள் வன்முறை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் அவர்களை வேறு வழிக்கு திருப்பியுள்ளது. ஆனாலும் அகிம்சை முறை தொடர்ந்து தோல்விகளைத் தழுவ எங்களது தொண்டர்கள் வன்முறை எனும் தொந்தரவு தரும் கருத்துக்களை யோசிக்கத் தொடங்கினர்.

1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கத்தான் செய்தன. இவையெல்லாம் வன்முறையை விட்டால் தீர்வு இல்லை என்ற எண்ணப் போக்கை ஆப்பிரிக்க மக்களிடையே உருவாக்கியது. நகர்ப்புறத்தில் சிறு குழு ஒன்றே உருவானது. இவர்களை வளரவிட்டால் இவர்கள் வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல கறுப்பர்களுக்கு எதிராகவும் திரும்பிவிடுவர் என்பதை நாங்கள் அறியாமலில்லை.

ஜூன் மாதம் 1961-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சூழ்நிலையினை நீண்ட பரிசீலனை செய்தபிறகு நானும் எனது தோழர்களும் முடிவுக்கு வந்தோம், வன்முறை இந்த தேசத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை. இந்தத் தருணத்தில் அகிம்சையையும், சமாதானத்தையும் பிரச்சாரம் செய்வது நல்லதல்ல என்பதை தலைவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் எங்களது அமைதியான கோரிக்கைகளை அரசு அடக்குமுறையால் ஒடுக்கியது.

இந்த நிலைலியில்தான் உம்கான்ட்டோ வீ சிஸ்வி என்ற அமைப்பு தோற்றம் கொண்டது. இதை நாங்கள் ஏதோ ஆசைப்பட்டு துவங்கவில்லை. அரசின் கொள்கைகள் எங்களை இந்த முனைக்கு நகர்த்தியது. உம்கான்ட்டோ அரசியல் பிரகடனத்தில் நாங்கள் என்ன கூறினோம் என்றால், எந்த ஒரு தேசத்திற்கும் அதன் வாழ்க்கையில் ஒருநேரம் வரும். அதாவது இரண்டே இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று அடங்கு அல்லது அடக்கு. இந்தத் தருணம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துவிட்டது. நாங்கள் அடங்கப்போவதில்லை, அனைத்துத் தரப்பிலிருந்தும் தாக்குவது ஒன்றே வழி என்ற முறைக்கு வந்தோம். மக்களைக் காப்பாற்ற, எங்கள் எதிர்காலத்தைக் காப்பற்ற, எங்கள் சுதந்திரத்தை அடைய. இனவெறி ஆதிக்கத்தை தகர்த்தெறிவோம்!