Saturday, February 23, 2013

பண்டைய இந்திய வரலாறு


வேதகால இலக்கியத்தின் துவக்க காலத்திற்கு இந்தியாவின் நாகரிக உதயத்தை தொடர்புபடுத்துவது ஒரு காலப் பிழையாகும். ஏனெனில் ஹரப்பா நாகரிகம் என்றும், சிந்துவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்படும் முன்னேற்றமடைந்த பண்பாடு கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகி இருந்தது. இலக்கியச் சான்றுகள், அகழ்வாராய்ச்சிச் சான்றுகளைவிட நம்பத் தகுந்தவை என்ற நம்பிக்கையே, இக்காலப்பிழை தோன்றுவதற்கு காரணமாகும். பழமையின் பொருளாய எச்சங்களைக் கண்டுபிடித்துப் பொருள் காணும் தன்மையால் அகழ் வாராய்ச்சி இரண்டு ஆய்வுப் பகுதிகளுக்குச் சான்றுகளை அளிக்கிறது. ஒன்று தொழில் நுணுக்கம் பற்றிய ஆய்வு, எப்படிப் பண்பாடுகள் மாறுகின்றன என்பதை அறிய இவ்வாய்வு துணை புரிகிறது. மற்றொன்று சூழல் ஆய்வு என்கிற எக்காலஜி (Ecology). இவ்விரு வகை ஆய்வு களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மதிப்பிடப் பெரிதும் துணைபுரிகின்றன. இலக்கியச் சான்றுகள் முழுவதையும் நாம் சேகரித்துவிட்டபடியால் புதிய சான்றுகளை அகழ் வாராய்ச்சிதான் அளிக்க வல்லது. ஹரப்பா எழுத்துகள் இன்னும் விளக்கப்படாததால், இலக்கியச் சான்றுகளில் மிகவும் முந்தையது வேதகாலத்து இலக்கியங்களே. மேற்கூறிய காலப்பிழைக்கு மற்றோர் காரணம, வேதகால மக்களே இந்திய நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் என்ற நம்பிக்கையாகும். ஒரு பண்டைக்கால மக்களின் சந்ததிகள் வாழ்கிற வரைக்கும் பழைய பண்பாடு மறைந்து போவதில்லை. இது முன்னேறிய நகர நாகரிகங் களை பொறுத்தவரை உண்மையாகும். ஏனெனில் அவை நகரங்களில் மட்டும் இன்றி, சுற்றியிருக்கும் கிராமப்புறங்களிலும், தங்கள் செல்வாக்கைப் பரப்புகின்றன. நகர நாகரிகங்கள் நிலை கொண்டிருந்த இடங்கள் அழிந்து போகலாம். ஆனால் அவ்விடங்களில் குடியேறுகிற புதியவர்களின் பண்பாட்டைப் பழைய பண்பாடு பாதிக்கிறது. அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகள், பிற்கால ஹரப்பா பண்பாட்டிற்குப் பின் பல பண்பாடுகள் தோன்றி நிலைபெற்றிருந்தன என்பதை நிரூபிக்கின்றன. இவை மேலைய இந்தியா, மாளவம், சிந்து கங்கைச் சமவெளி, சிந்து, தோ ஆப்-ஆப் முதலிலிய நிலப்பகுதிகளில் நிலைபெற்றிருந்தன. அப்பண்பாடுகள் ஹரப்பர்கள் யாராயிருந்த போதிலும், அவர்களிடமிருந்தே இந்திய நாகரிகத்தின் துவக்கத்தைக் காணவேண்டும்.

ஹரப்பா நகரங்கள் ஆரியர் படையெடுப்பால் அழிந்தன என்னும் கொள்கை இப்பொழுது சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. மொகஞ்சதாரோ என்னும் நகரத்தில் மட்டும் வன்முறையின் சுவடுகள் தெரிகின்றன. அவை கூட வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய அனுமானங்களில் ஒன்று, சிந்துநதிப் பகுதியிலும், சிந்து கங்கைச் சம வெளியிலும், ராஜஸ்தானிலும் பாய்ந்த ஆறுகளின் நீரோட்டப் பாதைகள் மாறின. இக்காரணம் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. மொகஞ்சதாரோவில் அடிக்கடி வெள்ளத்தால் அழிவுகள் நேர்ந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹரப்பா காலத்தில் இருந்த பாசன முறைகளால் நீரில் உப்புச் சேர்ந்திருக்கக் கூடும். இவற்றால் சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இம்மாற்றங்களால் அப்பகுதி முழுவதும் பாலைவனமாகிவிட்டது. சிந்து சமவெளியில் நகரங்கள் அழிந்து போனதைக் கொண்டு சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை அறிய முடிகிறது. இப்பண்பாடு புதிய புவியியல் சூழ்நிலைகளில், புதிய குடியேற்றங்களின் செயல்பாட்டினால் புதிதாக உருவாகியது.

பல தொல்பொருள் வகைப் பண்பாடுகள் பலவற்றி லிலிருந்து புதிய நகர நாகரிகங்கள் தோன்றின. இவற்றைக் கூட ஆரிய நாகரிகம் என்று வகைப்படுத்திக் கூற முடியாது. வேதகால இலக்கியத்தின் காலத்தில் இந் நகரங்கள் உருவானதால் இவை ஆரியர் நாகரிக மெனக் கருதப்படுகிறது. இங்குப் பண்டையக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தொகுதியினரை ஆரிய இனத்தவ  ரெனக் கருத உறுதியான சான்றுகள் எவையும் இல்லை. தூய-ஆரிய இனமொன்று இந்தியாவில் வாழ்ந்திருந்த போதிலும், இன்றுவரை அவர்கள் ஓரினமாகவே எஞ்சியிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மிகையான கற்பனையின் துணையோடுதான் அவ்வாறு எதிர் பார்க்க முடியும். விஞ்ஞான உயிரியல் அத்தகைய நம்பிக்கைக்கு விரோதமானது. தூய இனம் என்று, ஒன்று நெடுநாள் கலப்புறாமல் அவ்வாறே இருக்க முடியும் என்பதை உயிரியல் விஞ்ஞானம் மறுக்கிறது. இனக் கலப்பால் உலக முழுவதும் தூய இனங்கள் சுருங்கிவரும் போக்கை உயிரியல் ஆய்வுகள் காட்டுகின்றன. ஒதுங்கிய இடங்களில் பிற மக்கள் குழுக்களிடமிருந்து தனித்து வாழ்கிற இனத்தொகுதியினர் கூட தூய இனத்தவர் என்று உறுதியாகச் சொல்லுவதற்கில்லை.

ரிக் வேதகால மக்கள் ""தாஸ்யூ' என்ற மக்களைப் பற்றி சப்பை மூக்கு உடையவர்கள் என்றும், கருப்பு நிறமுடையவர்கள் என்றும் கூறியதிலிலிருந்து, ஆரியர் வெள்ளை நிறமுடையவர், நிமிர்ந்த மூக்குடையவர்கள் என்று குறிப்பால் உணர்வதன்றி, அவர்கள் தனியான வேறு இனத்தவர்கள் என்று முடிவு கூறுவதற்கில்லை. வரலாற்று -உறுதி நோக்கில் ஆரியன் என்பது ஆரிய மொழி பேசியவர்களைக் குறிக்கிறது என்றுதான் தெரிகிறது. இக்காலத்தில் அம்மொழி சமஸ்கிருதம் என்பதில் ஐயமில்லை. (Cultural Pattern). பண்பாட்டில்-ரிக் வேத மக்கள், ஹரப்பா மக்களிடமிருந்து பெரிதும் வேறு பட்டவர்கள். ஹரப்பா மக்கள் நகரவாசிகள். செப்புக் கருவி களைப் பயன்படுத்தினர். ரிக் வேத மக்கள் மாடுகளை காக்கும் பொருளாதாரம் உடையவர்கள். நாடோடி வாழ்க்கையினர். ஆடு மாடு வளர்க்கும் தொழிலை முக்கியமானதாகக் கொண்டு, பயிர்த்தொழில் வாழ்க்கையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் வழிபட்ட தெய்வங்களும், வழிபாட்டுச் சடங்கு களும் வெவ்வேறானவை.

சாம, யஜுர், அதர்வன வேதங்கள் குறிப்பிட்டுக் காட்டும் சமுதாயம், ரிக் வேத மக்களின் சமுதாயத்தினின்று வேறுபட்டதாகத் தெரிகிறது. இச்சமுதாயத்தின் பொருளாதார மையம்கூட தோ-ஆபுக்கும், நடுக் கங்கைச் சமவெளிக்கும் மாறிவிட்டது. இச்சமுதாயம் மாடுகளை காக்கும் நாடோடி வாழ்க்கையிலிலிருந்து, பயிர்த்தொழிலுக்கு  மாறி, அதன் பின்னர் நகர வாழ்க்கைக்கு முன்னேறிக் கொண்டிருந்ததாகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது குடியிருப்பு நிலப்பகுதிகளைப் போரில் வென்று கொண்டார்கள் என்று கருதுவதற்குச் சான்றுகள் இல்லை. எனவே பிற்கால வேத இலக்கியங்களில் இந்தோ ஆரிய மொழி பேசுவோருடைய பண்பாடும், அவர்களது வருகைக்கு முன்னர் இந்நிலப் பகுதிகளில் தங்கியிருந்த மக்களும் பண்பாடும் கலப்புற்றன என்று கொள்ளலாம். மொழியியல் சான்றுகள் இக்கொள்கையை வலுப் படுத்துகின்றன. திராவிட மொழியிலிலிருந்து பிறந்த சொற்கள் ரிக் வேதத்தில் உள்ளன. இச்சொற்கள் வேதகால சமஸ்கிருத மொழியில் நுழைந்துள்ளன. சமஸ்கிருத மொழியின் வளர்ச்சியை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால், திராவிட மொழியிலிலிருந்து கடன் பெறப் பட்ட சொற்களில் பெரும்பான்மையானவை. கி.மு. 1000-லிலிருந்து 500 வரையிலான காலத்தில் நுழைந்தவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இக்காலத்தையே பிற்கால வேத காலம் என்று குறிப்பிடுகிறார்கள். கங்கைப் பள்ளத் தாக்கிலும், வட இந்தியாவிலும் அக்காலத்தில் முன்நிலை-திராவிட மொழியை பேசிய மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். ப்ராஹ்யி, குருக், மால்டோ மொழிகள் பண்டைய மொழியின் எச்சங்களாகும் இந்தோ ஐரோப்பிய மொழிகளிலிலிருந்து பிறந்து வளர்ந்த வேறெந்த மொழியிலும் காணப்படாத ஆரியம் அல்லாத ஒலிப்பு முறைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன.

பெருங்கூட்டமாக வந்த ஆரியர் வடஇந்தியாவைப் போரில் வென்று அவர்களுக்கு முன் குடியிருந்த மக்களை அடிமைப்படுத்த அம்மக்களின் பண்பாட்டுக்கு வேறான தங்கள் மொழியையும், பண்பாட்டையும் நிறுவிக் கொண்டனர் என்ற கொள்கையை வரலாற்று ஆசிரியன் சந்தேகிக்காமல் இருக்க முடியாது. போர்களும் வெற்றிகளும், சிற்சில இருந்தனவென்றாலும், அவை தூர வடக்கில் மட்டுமேதான். ஆரியமொழி பேசும் மக்கள் வடஇந்தியாவிற்குள் குடியேறி அங்கு வாழ்ந்த மக்களோடு கலந்தனர் என்ற முடிவுக்கு வருவதே சான்றுகளுக்குப் பொருத்தமான முடிவாகும். பின்னர் உருவான பண்பாடு, இவ்விரு வகை மக்கட் குழுவினரின் கலப்பின் விளைவாகத் தோன்றியதாகும். வடஇந்தியாவின் பெரும்பகுதியில் இந்தோ ஐரோப்பிய மொழியை மக்கள் பேசத் தொடங்கினர். புதிய பண்பாட்டின் பொது இயல்பு இதுதான். இந்த நிகழ்ச்சி ஒரு சமூக சக்தியாகிவிட்டது. இதனை வரவேற்று வரலாற்று ரீதியாகக் காணவேண்டும்.

ஒரு மொழி பரவுவதற்குப் போர்- வெற்றி மட்டும் காரணமன்று. முன்னேறிய தொழில் நுணுக்கத்தோடு தொடர்புடைய ஒரு மொழி அக்காரணத்தாலேயே பரவக் கூடும் என்ற உண்மைக்கு உதாரணங்கள் பல வரலாற்றில் உள்ளன. கி.மு. இரண்டாயிரத்தில் தொடங்கு கிற காலத்தில் இந்தியாவில் இரண்டு புதுமைகள் தோன்றின. ஒன்று குதிரையைப் பரவலாக மக்கள் பயன் படுத்தத் தொடங்கியது. மற்றொன்று இரும்புத் தொழில் நுணுக்கத்தை மனிதன் அறிந்தான். இக்கூற்றை மெய்ப்பிக்கும் சான்றுகள் அகழ்வாராய்ச்சியிலிருந்து மட்டுமல்லாமல் இலக்கியத்திலிலிருந்தும் கிடைக்கின்றன. அக்கால இலக்கியங்களில் ""அஸ்வ' (குதிரை) ""கிருஷ்ண அயஸ்' (இரும்பு உலோகம்) என்ற சொற்கள் அடிக்கடி வருவதைக் காண்கிறோம். காளை இழுக்கும் வண்டியை விட சக்கரங்களையுடைய குதிரை இழுக்கும் வண்டி போக்குவரத்திற்கும் மேன்மையான தொழில் நுணுக்க முடையதாக ஆயிற்று. செம்பையும், வெண்கலத்தையும் விட இரும்பைப் பயன்படுத்தியதால் அம்மக்கள் பல புதிய தொழில் திறமைகளைப் பெற்றார்கள்.

ஆரிய மொழி பேசுவோர் வடஇந்தியாவில் பரவிய காலத்தோடு இப்புதிய தொழில் நுணுக்கம் பரவிய பொழுது அதனோடு சமஸ்கிருதம் தொடர்பு கொண்டிருந்தது. எனவே அம்மொழி பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரும்புத் தொழில்  நுணுக்கம்  ஏற்கெனவே நிலைத்திருந்த தென்னிந்திய பழைய சங்ககாலப் பண்பாட்டுப் பிரதேசங்களில் நிலைமை வேறு விதமாயிருந்தது. அங்கு திராவிடம் முக்கியமான மொழிக் குடும்பமாயிருந்தது.

ஒப்பிடக்கூடிய வரலாற்றுக் காலத்தில் ஈரானிலும், கிரேக்கத்திலும் இது போன்ற செயல்முறை நிகழ்ந்தது. சமஸ்கிருத மொழியின் விதையான இந்தோ ஐரோப்பிய மொழியே அப்பிரதேசங்களின் பண்பாடுகளின் தொடர்புப் பிணைப்பாக இருந்தது என்பது வியப்பாக இருக்கிறது. இப்பிரதேசங்களை ஆரிய இனத்தார் ஜெயித்திருந்தார்கள் என்றால் வரலாற்று வளர்ச்சிப் போக்கு ஒரே மாதிரியாக இருத்தல் வேண்டும். ஆரிய- முற்கால நிறுவனங்கள் அழிந்துவிடாமல் நிலைத்து புதிய மொழியை ஏற்றுக் கொண்டு, ஒரு புதிய பண்பாட்டு, உயர்நிலை மக்கள்- குழுவினரிடையே உருவாக்கியது. தென்கிழக்கு ஆசியாவின் பல பிரதேசங்களின் வரலாறு, இந்தியப் பண்பாட்டின் உறவின் விளைவாக இப்போக்கிலேயே வரலாற்றின் பிற்கால கட்டங்களில் சென்றிருக்கிறது என்றே தோன்றுகிறது.

சமூக உருவங்களின் பரிமாணத்தையும், சமூகம் அமைக்கப்பட்டிருந்த விதத்தையும் மாறாமல் நிலைத்திருந்த பண்பாட்டுக் கூறுகளின் அளவையும், சமூக மாறுதல்கள் நிகழ்ந்தபோது அவற்றின் தன்மைகள் எவை என்பதையும் பகுத்து ஆராய்ந்து நாம் மறுமதிப்பீடு செய்வது அவசிய மாகும். இந்தியாவில் சமூக அமைப்பு ஜாதி அமைப்பாக உருவாயிற்று. தற்காலம் வரை அது நீடித்துள்ளது. இவ்வமைப்பின் கொள்கை ""வருணக்கொள்கை'யாகும். மூலபுருஷனைப் பலிலிகொடுத்ததன் மூலம் வருணங்கள் உண்டானதாக ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதனைக் குறிப்பிடும் சுலோகங்கள் வருமாறு:

""புருஷனைப் பிரித்தபோது எத்தனை பங்காகப் பிரித்தார்கள்? அவனது வாயையும், புஜங்களையும் எப்பெயர் சொல்லிலி அழைத்தார்கள்? தொடையையும் பாதங் களையும் எப்பெயர் சொல்லிலி அழைத்தார்கள்?''

""பிராம்மணன் அவனுடைய வாய், அவனுடைய புஜங்களிலிலிருந்து ராஜன் உண்டாக்கப் பட்டான். தொடைகள் வைசியனாயின. பாதத்திலிலிருந்து சூத்திரன் உண்டாக்கப் பட்டான்''.

ரிக் வேதத்தில் நான்கு வருணம் பற்றி மேற்குறித்த ஒரே ஒரு குறிப்புத்தான் உள்ளது. ரிக் வேதத்தின் வேறு பகுதிகள் எழுதப்பட்ட காலத்திற்குப் பிற்காலத்தில் இவை எழுதப்பட்டதென மொழியியல் ஆய்வுகள் காட்டுகின்றன. பிற்காலத்தில் இருந்த ஒரு நிலைமைக்கு முற்காலத்தில் தோற்றம் காணுகிற முயற்சியில் விளைந்த புனைகதையே (Myth)  இச்சுலோகங்கள்.

ஹரப்பா காலத்திலேயே ஜாதி அமைப்பாக வளர்ச்சி பெறக்கூடிய சமூகக் கூறுகள் இருந்தன. ஹரப்பா நகரங்களின் குடியிருப்புகளைக் கவனிக்கும்பொழுது மூன்று சமூகப் பிரிவுகள் இருந்தனவென்பது புலனா கிறது. பிற்காலத்தில் நான்காவது சேர்ந்தது அல்லது ஹரப்பா சமூக அமைப்புக்குள்ளேயே, மாறுதல் ஏற்பட்டு மூன்று பிரிவுகள், நான்கு பிரிவுகளாக ஆகியிருக்கவும் கூடும்.

ஜாதி அமைப்பின் இயல்புகள் யாவை? ஜாதி என்பது மணஉறவுகளைக் கட்டுப்படுத்தும் பரம்பரைக் குழுக்கள், தொழிலை அடிப்படையாகக் கொண்டு சாதிகள் கீழ் மேல் அடுக்குகளாக உள்ளன. இந்தக் கீழ்மேல் அடுக்கில் தமக்குரிய நிலையிலிலிருந்து ஒரு ஜாதியினர் வேறு ஜாதி யினருக்குச் செய்ய வேண்டிய தொண்டு நிர்ணயிக்கப்படும். இதனைப் பிற்கால நூல்கள் ""ஜாஜ்மானி' உறவுகள் எனக் கூறும். இவ்வுறவுகள் பொருளாதார உறவுகளுக்கு அடிப்படையாகின்றன. ஜாதி அடுக்கின் உயர்வு தாழ்வுகள் செய்கின்ற தொழிலைப் பொறுத்தது. தூய்மையான தொழில் புரோகிதருடையது. மிகவும் அசுத்தமான தொழில் தாழ்த்தப்பட்டவருடையது இவ்வேறுபாடுகள் சுலபமாகத் தெரிந்து கொள்ளக்கூடியவை. பிராம் மணருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. உச்சியில் இருக்கும் ஜாதிக்கும் அடியில் இருக்கும் ஜாதிக்கும் வேறுபாடு எளிதில் தெரிந்துவிட்டாலும், இடைநிலைச் சாதிகள் உயர்வு தாழ்வுகள் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிறது.

இங்கு இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இவ்வடிப்படையில் அமைக்கப்படும் சமுதாயம் ஜாதிகள் என்ற உருவத்தைப் பெறுகிறது. இதற்கு ஆரியர் திராவிடர் என்ற இரு இனங்கள் அவசியமில்லை. முதலாவது சமூக, பொருளாதார அந்தஸ்து, அரசியல் ஆற்றல், சுத்த அசுத்தங்கள் ஆகிய தன்மைகளுக்கும் இவ்வமைப்பிற்கும் தொடர்புகள் இருக்கின்றன.

இரண்டாவது: ஜாதியின் செயல்பாட்டு அம்சம் வருணமன்று: ஜாதிதான் வருணம் என்பது சமூகக் குழுக்களது அடுக்கின் கொள்கை மாத்திரமாகும். அதனைக் "குழு' (Tribe) என்று மொழி பெயர்க்கலாம். ஜாதி உறவுகள் சமூகம் செயல்படும் உண்மையான வழிமுறைகளைக் காட்டுகின்றன. வருணம் என்பது சடங்கு ஆசாரத்தில் அந்தஸ்தாகும். ஜாதி என்பது உண்மையான சமூக அந்தஸ்தாகும். வருணத்தைக் குறிப்பிடும் பொழுது தரும சாஸ்திரங்கள் ஜாதிக் கொள்கைகள் குறிப்பிடப்பட்டன. ஒவ்வொரு ஜாதியின் சமூக பொருளாதார நிலையை அவை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு சடங்காச்சார அந்தஸ்தை அளிக்க தரும சாஸ்திரங்கள் முயன்றன. தரும சாஸ்திரங் களின் வருண அமைப்பு மாறாமல் இருப்பதாக கூறப் படுவதால், சமூகம் மாறாமல் இறுக்கமாக இருப்பதென்று கொள்வதற்கில்லை. ஆனால் வருண அமைப்பு பற்றிய கொள்கை மாறாமல் இருந்தது என்பதே அதன் பொருளாகும். தரும சாஸ்திரங்கள் சமூக சட்ட அமைப்பை வரையறுத்துக் கூறும் ஆவணங்கள். இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்கு அவற்றை அந்த அம்சத்தில் ஒப்பிடலாம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இன்றைய இந்திய சமூகத்தின் கொள்கைப்பூர்வமான அடிப்படைகளைக் கூறுகிறது. ஆனால் அது உண்மையான நிலைமைகளின் முழுமையான வருணனையன்று. கொள்கையையும் நடைமுறையையும் பிரித்து அறிவது ஆய்வுமுறையில் வழக்கமானதே. கொள்கை, நடைமுறையைவிட மேன்மையானதாக இருப்பினும் சரி, கொள்கை சற்றேறக் குறைய மாறாமலேயிருக்கிறது.

வருண அமைப்பில் அடங்கிய பல குழுக்களைப் பற்றி ஆராய்ந்தால் அகன்ற வரலாற்று மாறுதல்களுக்கும் பொருத்தமாக அவை அந்தஸ்தில் மாறுவதைக் காணலாம். வேத பிராம்மணன் சமயச் சடங்காச்சாரங் களுக்குத் தலைமை தாங்குவதோடு, அரசியல் ஆற்றல் உடையவனாகவும் காணப்படுகிறான். எல்லாப் பிராம்மணர்களும் ஒரே விதமான அந்தஸ்து உடையவர் களல்லர். குருபாஞ்சால பிராம்மணர்கள் மகதப் பிராம்மணர்களை இழிவானவர்கள் என்று கருதினார்கள். அவர்களைப் ""பிராம்மணரென்று அழைக்கப்படுவோர்' எனறு குரு பாஞ்சாலப் பிராம்மணர்கள் குறிப்பிட்டார்கள். சில அரசர்களின் புரோகிதர்களாக, மகதப் பிராம்மணர்கள் ஆன பின்னரே அவர்கள் குருபாஞ்சால பிராம்மணர்களாக மதிக்கப்பட்டனர். ஆடீராப் பிராம்மணர்கள் என்போர் மிலேச்சர்கள் (ஆரியரல்லாதோர்) என்று குறிப்பிடப் பட்டனர். அவர்கள் பிராம்மண சாதியினரும், ஆம்பஸ்த சாதியினரும் கலந்தபோது தோன்றியவர்கள் என்று கருதப்பட்டனர். தென்னிந்தியக் கல்வெட்டு ஒன்று போயா பிராம்மணர்களைச் சூத்திர ஜாதியென்று குறிப்பிடுகிறது. சமஸ்கிருத மரபோடு நெருங்கிய தொடர்பு இல்லாத புரோகிதர்களும், ஜாதி அமைப்பில் புதிதாக இணைக்கப் பட்ட இனக்குழுக்களும், பிராம்மண அந்தஸ்து அளிக்கப்பட்டு, ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு வருண அமைப்பில் தாழ்ந்த அந்தஸ்தே இருந்தது. பண்டைய  அரசாங்கங்களில் பிராம்மணர்களுக்கு உயர்ந்த இடமும் மதிப்பும் இருந்தன. ஆனால் பண்டையக் குடியரசுகளில் அவர்களுக்கு  நிரந்தரமான  உயர்ந்த நிலை இருக்க வில்லை. செல்வர்களான நில உடைமையாளர், வணிகர்கள் ஆதரவை நாடி அவர்கள் பௌத்த பிக்கு களுடன் போட்டியிட்டார்கள் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. இலக்கியச் சான்றுகளை ஐயமின்றி ஏற்றுக் கொள்வதற்கில்லை. அவற்றைப் பிற சான்றுகளோடு ஒப்பிட்டுச் செய்திகளை அறிந்து, ஆராய்ந்து மதிப்பிட வேண்டும். பிராம்மணர்கள் புரோகிதப் பணியை மட்டும் செய்து வந்தார்கள் என்று கொள்வதற்கில்லை. தச்சு வேலை முதலிலிய தொழில்களைக் கூட பிராம்மணர்களில் ஏழ்மையானவர்கள் செய்து வந்தார்கள். பிராம்மணர்களில் செல்வர்கள், நிர்வாகப் பதவிகளையும், அமைச்சர் பதவியையும், புரோகிதப் பணியோடு சேர்த்து வகித்து வந்தனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு கல்வியறிவு இருந்ததுதான். இதே காரணத்தால் தான் பிற்காலத்தில் சமண வணிகர்கள் ராஜபுத்திர அரசுகளில், உயர்ந்த அரசாங்கப் பதவிகளையும், தளபதிப் பதவிகளையும் வகித்தனர் என்பது இலக்கியச் சான்றுகளால் புலனாகிறது.

குப்தர் ஆட்சிக்குப் பிற்காலத்தில் பிராம்மணர் நிலை மேன்மையடைந்தது. அக்காலத்தில் பௌத்தம் செல்வாக்கிழந்தது. பொருளாதார அடிப்படையும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ள பிராம்மணரது கல்வியின் இன்றியமையாமையும் பிராம்மணரின் சமய ஆதிக்கத்திற்கு வழிவகுத்தன. இக்காலத்தில் பிராம்மணருக்கு நிலங்களும், நில வருவாயும் தானமாக அளிப்பது அதிகரித்தது. அரசனது அதிகாரியாகப் பதவி வகிப்பதற்காகவோ, அரசருக்கு ஊழியம் புரிந்ததற்காகவோ சம்பளத்திற்குப் பதில் பிராம்மணருக்கு நிலம் அளிக்கப் பட்டது. இவை தவிர "அக்ரஹாரம்' என்றும் "பிரம்மதேயம்' என்றும் நிலங்களும், கிராமங்களும் பரம்பரை உரிமையோடு பிராம்மணர்களுக்குத் தானமாக வழங்கப் பட்டன. கல்வியை மதித்தோ, சமயப் பணிகள் செய்வதற்கு ஊதியமாகவோ, அரசப் பரம்பரையின் கொடி வழிப் பட்டியலை எழுதுவதற்காகவோ, இத்தானங்கள் அளிக்கப் பட்டன. இவற்றால் பிராம்மணருடைய வருமானமும், சமூக நிலையும் உயர்ந்தன. நிலத்தோடு எண்ணற்ற உரிமைகளும் அவர்களுக்கு கிடைத்தன. உதாரணமாக எட்டாவது நூற்றாண்டில் ஒரு பல்லவ மன்னரால் விடுவிக்கப்பட்ட சாசனத்தின் வாசகம் வருமாறு:

""22-வது ஆட்சியாண்டில் மன்னர் பிறப்பித்த ஆணையாவது''.... பிரம்மயுவராஜன் விண்ணப் பித்ததற்கு இணங்க கோரஷர்மானனை ஆணத்தியாக வைத்து, கொடுக்கள்ளி கிராமத்தைக் குடி நீக்கி, பிரமதேயமாக்கி, பாரத்வாஜ கோத்திரத்து, சந்தோக்கிய சூத்திரத்து, புணிவாசியான செட்டிரங்க சோமயாஜிக்கு நீரோடட்டிக் கொடுக்க, ஊரோம் கரணத்தான் எல்லை காட்ட, பிடி சூழ்ந்து, கள்ளி நாட்டி கல்லும் நாட்டிக் கொடுத்தோம்.'' (எல்லையைப் குறிப்பிடுவதற்காக) இவ்வாறு தானம் பெற்றவர் எக்கடமைகள், வரிகளிலிருந்து விலக்குப் பெறுகிறார் என்பதைச் சாசனம் கூறுகிறது.

""இந்நான் கெல்லைக்குட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்களை இத்தானம் பெற்றவர் உழுவித்துண்பா ராகவும், நீரை வழிப்படுத்தக் கால்வாய்கள் வெட்டிக் கொள்வா ராகவும், இதனைப் பெற்றவர், இவ்வூரில் நிலமுடையவர்கள் இருக்க வேண்டிய கடமைகளும், இறைகளும் பாட்டங் களும் இருக்க வேண்டியதில்லை. அவையாவன: செக்குப் பாட்டம், தறிப்பாட்டம், கிணறு தோண்டக்கூலி, கரணத்தான் பங்கு, குயப்பாட்டம், நெய்விலை, அணிவிலை, வேடர், தூதர், கணிகையர், இவர்களுடைய பங்கு, நற்புல், நல்வேறு... - ஊரார், சபையார், அதிகாரிகள் முன்னிலை யில் இத்தானம் அளிக்கப்பட்டது''.

இச்சாசனம் செம்பில் வெட்டப்பட்டு இப்பிராம்மணர் குடும்பத்தில் ஒரு சட்டபூர்வமான ஆவணமாக இருந்தது. இதைப் போலவே அதிகாரிகளுக்கும் அரசர்கள் தானமளித்துள்ளார்கள்.

கோயில், பிராம்மணருடைய சக்தியை அதிகமாக்கம் நிறுவனமாகிவிட்டது. பழங்காலக் கோயில்கள் மிகச் சிறியனவாயிருந்தன. சில நூற்றாண்டுகளில், கி.பி. 500-க்கு பின்னர், அவை மிகவும் பெரியனவாயின. பெரிய கட்டிடங்கள் எழுந்தன. நிலங்களும், கிராமங்களும் கோயில்களின் உடைமைகளாயின. ஏராளமான நிலவருவாயும், காணிக்கை வருவாயும் அவற்றிற்குக் கிடைத்தன. கோயில் நிதியை நிர்வகிக்கும் பதவிகள், அரசரது ஆதரவைப் பெற்றவர்களுக்கே கிடைக்கும். கோயில்கள் கல்வி நிறுவனங்களாகி, பிராம்மணீயக் கல்விக்கு நிறுவன அடிப்படையை அமைத்தன. மடங்கள், கோயில்களின் மூலம் பிராம்மணீயக் கருத்துகள் திட்ட மிட்ட வகையில் பரவ வழி பிறந்தது. குப்த முற்காலத்தில் பௌத்தப் பள்ளிகள் சமூகத்தற்குச் செய்து வந்த பணியை, இக்காலத்தில் கோயில்கள் செய்தன. படிப்பையே நோக்கமாகக் கொண்ட சிலருக்கு இலவச மாகக் கற்றுக் கொள்வதற்கு, கோயில்கள், பள்ளிகளின் செல்வச் செழிப்பு இடமளித்தது. பல தர்க்க விவாதங்கள் நடைபெற இத்தலங்கள் வசதியளித்தன.

சத்திரியர்கள் பிராம்மணர்களோடு ஒத்துப்போவது ஒரு பிரச்சனையாகிவிட்டது. இப்பிரச்சினைக்கு அடையாளபூர்வமான புனைகதைதான் பரசுராமன் கதை யாகும். பௌத்த நூல்கள் சத்திரியனுக்கு நிலவுடைமை யாளன், குழுத் தலைவன் என்ற நிலைகளில் முக்கியத்துவம் அளிக்கிறது. கொள்கையளவில் அரசர்கள் சத்திரியர் களாக இருத்தல் வேண்டும். ஆனால் குப்தர் காலத்திற்கு முன்னர் சத்திரிய அரசு பரம்பரைகள் அபூர்வமாகவே காணப்படுகின்றன. நந்தர்கள், சூத்திரர்கள், மௌரியர்கள், ஆகியோரை தாழ்ந்த குலத்தவர் என பிராம்மண நூல்கள் கூறுகின்றன. சுங்கர்கள், சேதியர், சோழர், பாண்டியர், சேரர், ஆந்திரர் ஆகியவர்கள் சத்திரியர்கள் அல்ல. அவ்வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள வில்லை. அந்நியக் கொடிவழியுடைய இந்தோ- கிரேக்கர், சகர், குஷாணர் முதலிலியோருக்கு சத்திரியரில் தாழ்ந்த குலமெனக் கருதப்படும் "விராட்டியர்' என்ற அந்தஸ்தை, பிராம்மணர், அரைகுறை மனத்தோடு அளித்தனர். ஆயினும் பாணினியும், மனுவும் இவர்களைச் சூத்திரராகவே கருதினர். சில அரச மரபுகள், சூத்திரர் வழித் தோன்றல்கள் என்பதை மறைக்க எவ்வித முயற்சியும் புராணக் கதைகள் எழுதப்படும் பொழுது மேற் கொள்ளப்படவில்லை. செயல்முறை அரசியலில் ஓர் அரச மரபின் ஜாதி பரம்பரை, அதனை ஆளத் தகுதியில்லாததாக ஆக்கிவிடுவதில்லை.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிய நிர்வாக மாற்றங்களும், நில அமைப்பு மாற்றங்களும் ஏற்பட்டு ஒரு புதிய சமூக அமைப்பு தோன்றியது. கீழ் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், அயல்நாட்டவர், இன்ன  ஜாதியென்று சொல்ல முடியாதவர்கள் மிகப்பலர் அரசியல் ஆதிக்கம் பெற்று சிறு சிறு சுதந்திர நாடுகளை ஆளத் தொடங்கினர். அவர்கள் தமது முன்னோர் வரலாற்றை அதீதக் கற்பனை கலந்து எழுதச் செய்தனர். தங்களது குலத்தோற்றத்தின் உண்மையை மறைக்கவே அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இவ்வாறு, மவோரில் வாழ்ந்த குஹில்லர்கள், பில்லர்களோடும், சண்டெல்லர்கள், கோண்டர்களோடும் தொடர்புடையவர்களாகக் கூறப்படுகின்றனர். ராஜபுத்திர அந்தஸ்திற்கு உரிமை கொண்டாடிய இவர்களெல்லாம் ஆளத்தொடங்கிய காலத்தில் ஆரியப் பண்பாட்டை அறிந்தவர்களாகத் தோன்றவில்லை. இவர்களது  முன்னோர்கள் ஆரியமல்லாத மொழிகளைப் பேசியதாகவும் அவர்களது, பழக்க வழக்கங்களும், சமூக அமைப்பும், இனக்குழு அமைப்பிற்குரியனவாகத் தோன்றுகின்றனவேயன்றி, ஜாதி அமைப்பிற்குரியனவாகத் தோன்றவில்லை. இவ்வரசர்களெல்லாம் ஆதிக்கம் பெற்ற பின்னர் போலியாக சத்திரிய அந்தஸ்தை விரும்பினர். பிராம்மணர்களைக் கொண்டு தங்கள் முன்னோர் மரபை எழுதச் செய்தனர். புராணங்களிலுள்ள சூரியவம்சம், சந்திரவம்சம் இவையிரண்டோடும் இவ்வரசர்களைப் பிணைத்து அவர்களது மரபு வழியை பிராம்மணர்கள் எழுதி வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் சத்திரிய அந்தஸ்து தங்களுக்கு உண்டு என்று உரிமை கோருவதற்கு பிராம்மணர் சான்றுகளைப் படைத்துக் கொடுத்தார்கள். இன்னும் அரசியல் ஆதிக்கம் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்கள் கையில் அகப்படும் நிலையில்தான் இருந்தது. ஆனால் அவர்கள் வர்ண அந்தஸ்தை தேடிப்பிடித்துக் கொள்வது அவசியம் என்ற நிலைமை இருந்தது. சமஸ்கிருதப் பண்பாடு பரவியதும் அப் பண்பாட்டின் தலைவர்கள் பிராம்மணர்களாக இருந்ததும் தான் இந்நிலைமைக்குக் காரணங்களாகும். இப்புதிய  அரசுகள், பிராம்மணரால் தோற்றுவிக்கப்பட்டவை என்றும் அல்லது நிலங்களைத் தானமாகப் பெற்று, உயர் பதவிகளையடைந்தவர்களால் நிறுவப்பெற்றவையென்றும் கதைகள் புனையப்பட்டன. உதாரணமாக பண்டல்கண்டில் ஆண்ட பரிவிராஜகர் என்ற அரச மரபினர் தங்களைப் பிராம்மண வம்சம் என்று அழைத்துக் கொண்டனர். மைத்ராக குலத்தைச் சேர்ந்த பத்ராகன் என்ற குப்த தளபதி சௌராஷ்டிரத்தின் மண்டலாதிபனாக (ஆளுநன்) நியமனம் பெற்றான். அவனது மகன் சேனாதிபதி என்ற பட்டத்தைப் புனைந்து கொண்டு அரசாண்டான். அவனுடைய பெயரனும், அப்பெயரனுக்குப் பின் ஆண்ட அவனுடைய பரம்பரையினரும் மகாராஜா என்ற பட்டத்தை எளிதில் சூட்டிக் கொண்டு மன்னர்களாகிவிட்டனர்.  ஆறாவது நூற்றாண்டில் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மைத்ராக வம்சத்தினர் சுதந்திர மன்னர்களாகப் பல தானங்கள் அளித்துக் கல்வெட்டுகளை வெளியிட்டுள்ளார்கள். அதிகாரிகளாயிருந்து, சிற்றரசர் களாகி பின் அரசியல் சூழ்ச்சிகளால் அவர்கள் சுதந்திர அரசர்களானார்கள். இவ்வாறு கலகங்களும், குழப்பங்களும், போர்களும் நிலவிய காலங்களில் சில பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த அதிகாரிகளும், தலைவர்களும், அரசர்களான செய்திகள், பல இலக்கியச் சான்றுகளின் மூலம் வெளியாகின்றன. இவர்களுக்கு மேன்மையான அங்கீகாரம் இருக்கவில்லை.

இந்நிலைமை அண்மைக்காலம் வரை இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்டது. அரசியல் ஆதிக்கம் பெற்றபின், சரியான சாதியிலும், வருணத்திலும் அவர் களை அமர்த்த வேண்டிய பிரச்சினை பிராம்மணர்களை எதிர்நோக்கியது. இக்காலத்தில் அரச பதவி பெற்ற பல தலைவர்களுக்குப் பிராம்மணர்கள் சத்திரிய பதவியையும் அளித்தார்கள். இதனால்தான் இக்காலத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான சத்திரிய வம்சங்கள் முளைத்தன. பிற்காலத்தில் இந்நடைமுறை காணப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மஹமத்பெகாரா சுல்தானைப் புகழ்ந்து உதயராஜா என்ற ஒரு சமஸ்கிருத புலவன் நூல் இயற்றினான். புதிதாக இஸ்லாமியனாகி மதவெறியோடு இந்துக்களை தாக்கிய அவ்வரசனை உதயராஜா தனது காவியத்தில் சத்திரியன் என்றும் ""இந்து தர்ம பரிபாலகன்' என்றும் வானளாவப் புகழ்ந்துள்ளான்.

அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற மேற்கூறிய வழிமுறைகளை தவிர, அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிற மிகப்பழமையான வழியையும், அரச பதவியை விரும்பியவர்கள் பின்பற்றினர். கடைசி மன்னன் தனது படைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அவனது பிராம்மண படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கன் அவனைக் கொன்றுவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இம்முறையில் ஆட்சியைக் கைப்பற்றியவர்களில் புஷ்யமித்திரன்தான் கடைசியானவன் என்பதில்லை. வைசியர்களின் சமூக நிலை பற்றி, பழங்காலச் சான்றுகளிலிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. பிராம்மண-நூல்களில் அவர்கள் முக்கியமான சமூகப் பகுதியினராகக் கூறப்படவில்லை. பௌத்த நூல்கள் அவர்களைச் செல்வர்களான வணிகர்களென்று (செட்டி, கிரகபதி) குறிப்பிடுகின்றன. வைசியர் என்ற சொல்லிலின் பொருளையுடையதாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சமூகத்தில் முக்கியமான பாத்திரம் இருந்தது. இவர்கள் நகரப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் பெற்றிருந்ததோடு, பௌத்த சமயத்தின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். கைத்தொழில்களும் வணிகக் குழுக்களும் தோன்றிய காலத்தில் வணிகர்களின் சமூகப் பாத்திரம் முக்கியத்துவம் அடைந்தது.

வருண விதிகளுக்கு மாறாகச் சமூகப் பிரிவு களுக்குள்ளே உறவுகள் தோன்றின என்பதை வெளிப் படுத்தும் சான்று ஒன்றை ஐந்தாம் நூற்றாண்டு சாசனம் ஒன்று தருகிறது. பட்டு நெசவாளர்களின் வணிகக் குழுவின் செலவில் சூரியனுக்குக் கோயில் கட்டப்பட்டதைப் பற்றி அச்சாசனம் கூறுகிறது. இக் குழுவினர் லாட தேசத்திலிலிருந்து மேல மாளவத்தில் இருந்த தாசபுரம் என்ற நகருக்கு வந்து, வாணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டி, அவ்வூரில் ஒரு கோயில் கட்டுவதற்குப் பணம் அளித்தனர். அக்குழுவில் சிலர் பட்டுநூல் நெசவுத் தொழில் செய்தனர். வேறுபலர், பல்வேறு தொழில்களைக் செய்து வந்தனர்.

அச்சாசனம் கூறுவதாவது:

""அவர்களில் சிலர் வில் வித்தையில் சிறந்து விளங்கினர். சிலர் அற்புதமான கதைகளைக் கூறினர். மெய்ச் சமயத்தின் விதிகளைச் சிலர் போதித்தனர். சிலர் தங்கள் குலத்தொழிலில் திறமை பெற்றிருந்தனர். (குலத்தொழில்-பட்டு நெசவு) வேறு சிலர் உயர்ந்த லட்சியங்கள் கொண்டிருந்தனர்: சிலர் சோதிடம் கற்றிருந்தனர். சிலர் போர்த்தொழில் பயின்று, பகைவர்களை அழிக்கும் வீரமும் வலிலிமை யும் பெற்றிருந்தனர். இக்குழுவின் புகழ் எல்லாத் திசை களிலும் பரவியிருந்தது.''

நெசவுத்தொழில் செய்யும் சாதியின் உறுப்பினர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்ததை அறிய நமக்கு வியப்பு உண்டாகிறது. ஆயினும் அவர்கள் பட்டு நெசவுத் தொழில்-குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். கைத்தொழிலாளர் குழுக்களும், தொழில் வணிகக் குழுக்களும் புதிய ஜாதிகளை உருவாக்கி வந்தன. இனக் குழுக்களான பழங்குடி மக்களும், சமூகத்தில் இணைந்து புதிய ஜாதிகளை தோற்று வித்தனர். 9-வது நூற்றாண்டு முதல் இத்தகைய சமூக மாறுதல் போக்கைக் காட்டும் சான்றுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நிர்வாகப் பணிகளில் இருந்தவர்களும், வணிகர்களும் புதிய சாதிகளை அமைத்துக் கொண்ட னர். அவை ""காயஸ்தர்' ""கத்ரி' முதலிலியனவாகும். அவற்றுள் சில இன்னும் இருக்கின்றன. வரலாற்றின் இடைக்காலத்தில் காயஸ்தர்கள் ஆட்சி நிர்வாகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நடுக்காலச் சாசனங்களில் கிராம அதிகாரிகளின் பதவிப் பெயர்களான, ""மஹத்தரா' ""பட்டாகிலா' ""கவும்ட!' என்பவை இன்று ""மேதர்', ""பட்டீல்', ""படேல்',  ""கௌடா' என்ற சாதிப் பெயர்களாக மாற்றிக் கொண்டு இன்றும் வழக்கில் உள்ளன. புதிய சாதிகள் உருவாவது சாதிகள் பெயர் மாற்றுவது நமது வரலாற்றில் தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்தப் போக்கு இந்துக் களிடம் மட்டுமல்லாமல், சீக்கியர்களிடமும், கிறிஸ்தவர் களிடமும் காணப்படுகிறது. சாதி மாற்றங்களைப் பற்றி தருமசாஸ்திரங்களிலிலிருந்து அறிகிறோம். ""அபிரர்' பிராம் மணரோடு தொடர்பு இழந்து போனதால் சூத்திரர்களா னார்கள்: சத்திரியராயிருந்த ""கிராதர்' சூத்திரரானார்கள். அதுபோலவே ""புந்தரர்', ""மாகதர்', ""ஓட்ரர்' முதலிலியோரும் சத்திரியப் பதவியிழந்து சூத்திரர் ஆனார்கள். தொழில் குழுக்கள், சாதிகளானதற்கு உதாரணமாக, அயஸ்காரர் (கொல்லர்) குலகியர் (குயவர்) ""கோப' (இடையர்) தந்துவாயர் (நெசவாளி) ""தைலிக' (வாணியன்) என்ற சாதிகளைத் தரும சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு நமக்குக் கிடைக்கும் படிமம், இறுக்கமானதோர் சமூக அமைப்பைக் காட்டவில்லை. சமூக அமைப்பில் நெகிழ்ச்சி இருந்தது. ஆனால் அது யாரும் எந்தச் சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிற  ""திறந்த சமுதாயமாகவும் இருக்கவில்லை. (ஞல்ங்ய் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) ஓர் எல்லைக் கோட்டினுள் மாறுதலுக்குட்படும் சமுதாயமாக அது இருந்தது என்று கொள்வதே சான்று களுக்குப் பொருத்தமான படிமமாகும். இந்திய சமூகத்தை இவ்வெல்லைகளுக்குள் பார்த்துத்தான் மறுமதிப்பீடு செய்தல் வேண்டும். இத்தடுப்பு எல்லைச் சுவர்களுக்குக் காரணம் மதம், சமூக வழக்கம் ஆகியவை என்று பொதுவாகச் சொல்லிலிவிட்டால் போதாது. அவை ஏன் எழுந்தன என்பதை விளக்க வேண்டியது அவசியம். இவ் வெல்லைச் சுவர்கள் சில வரலாற்று நிலைமைகளில், பூகோளவியல், மக்கள்தொகை இயல், தொழில் நுணுக்க வியல் காரணங்களால் தோன்றி மதம், சமூக வழக்கம் என்ற போர்வைகளுக்குள் ஒளிந்து கொண்டுள்ளன. இக்கூறுகளில் செயல்பாட்டினால் சமூக மாறுதல் மந்தமான வேகத்தில் நடைபெற்றது. அந்தஸ்தினால் மட்டும் சமூக- பொருளாதார பாதுகாப்பு ஏற்பட்டு விடாது. ஆயினும் உயர்நிலைச் சாதியினர் பாதுகாப்போடு வாழ்ந்தனர். ஒரு சாதிக் குழுவாக மேல்நோக்கி இயங்குவது சாத்தியமாகவே இருந்தது. தனி மனிதர்கள் கூட சாதி ஏணியில் மேல்நோக்கி ஏற முடிந்தது.                  அரசியல் ஆதிக்கத் துறையில் தவிர பிறவற்றில் இத்தகைய மாறுதல்கள் சாதாரணமாக இருக்கவில்லை. சாதி ஏணியில் கீழ்நிலைகளில் மேல் நோக்கிச் செல்வது சாத்தியமாக இருக்கவில்லை. அந்நிலைகளில் மாறுதல் நிகழ்வது அரிதாயிருந்தது. ""சண்டாளன்' என்று ஒரு சாதியை அப்பெயரால் அழைத்துவிட்டால், அது சண்டாள சாதியாகவே எப்பொழுதும் இருக்க வேண்டுமென நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.

பௌத்த நூல்களிலிலிருந்து சமூகப் பூசல்கள் நிகழ்ந்தனவென்பது அறியப்படுகிறது. அசோகன் சாசனங்களில் பூசல்களில்லாமல் மக்கள் இணைந்து வாழ வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றன.

""எப்பொழுதும் ஒரு மனிதன் மற்றொருவனது குழுவை மதிக்க வேண்டும். அதனால் இரு குழுக்களுக்கும் நன்மை உண்டாகும் ஒற்றுமையைப் போற்றுதல் வேண்டும். அயலாருடைய கொள்கை களைக் கேட்டு அவற்றை மதித்து நடக்கவேண்டும்''.

இனக்குழுக்களும். தொழில் குழுக்களும் ஜாதிகளாக மாறியபொழுது, அவற்றிற்கு வருண அந்தஸ்தும், ஜாதி அந்தஸ்தும் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்தரமும் ஒவ்வொரு குழுவிற்கும் கற்பனை செய்யப்பட்டது. பல குழுக்களுக்குச் சூத்திர சாதியின் அந்தஸ்துதான் கிடைத்தது. நடுக்காலத்தில் சூத்திர சாதிகள் மிகுதியானதற்கு இதுவே காரணம். தரும சாஸ்திரங்களையும், வேத இலக்கியங்களையும், புராணங்களையும் மட்டுமல்லாமல், சாதிப் பழக்க வழக்கங்களையும் சட்டத்தின் ஆதாரங் களாகக் கொண்டனர். உயர் சாதிகளுக்குத் தரும சாஸ்திர ஒழுக்க விதிகளே சட்டமாகக் கொள்ளப்பட்டன. கிராமப்புறங்களுக்கு ஒரேவிதமான சட்டங்கள் இல்லாமைக்கு இது ஒரு காரணமாகும்.

புதிய சாதிகள் தங்கள் மதநம்பிக்கைகளையும் சடங்காச்சாரங்களையும் சமூகத்திற்குக் கொணர்ந்தன. இவை முக்கிய மரபோடு கலந்து, அவர்கள் தழுவிக் கொண்ட மதத்தின் பகுதிகளாக ஆகிவிட்டன. விஷ்ணுவின் அவதாரக் கதைகளும் பெண் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளும், வேறு சடங்காச்சாரங்களும் இவ்வாறுதான் இந்து மதத்தில் படிமுறை வளர்ச்சியில், புதிய குழுக்கள், இந்து சமுதாயத்தில் நுழைந்தபோது ஏற்றுக் கொள்ளப்பட்டன. சண்டெல்லா அரசர்களின் ""மணியதேவ' வழிபாடு இந்து சமயத்தின் பழைய மரபைச் சேர்ந்ததன்று. அவர்களுடைய இனக்குழு வாழ்க்கையின் போது தோன்றிய அவ்வழிபாட்டு முறையை, அவர்கள் இந்து சமுதாயத்தில் இணைந்தபொழுது, இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். சாதிப் புராணங்களின் நோக்கம், சாதிகளின் பழைய மரபைப் பாதுகாத்து சாதி அடுக்கின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்றைப் பொருத்தி வைப்பதுதான். இந்து சமூகத்தில் புதிதாக இணைந்த குழுக்களின் புரோகிதர்களும், பூசாரிகளும், பிராம்மண அந்தஸ்து அளிக்கப்பட்டனர். பல பழைய வழக்கங்கள் நீடித்தன. நடுக்காலத்தில் சிந்து பிரதேச முஸ்லிலிம்களை, வேறு பிரதேசத்து முஸ்லிலிம்களாகவே கருதியதில்லை.

ஒவ்வொரு மதத்திற்கும் இருவித தோற்றங்கள் உண்டு. ஒவ்வொரு சமூகத்தின் மதிப்புகளையும் பாதுகாத்து நிலைக்கச் செய்யும் பாத்திரம் உண்டு.அப்பாத்திரம் நம்பிக்கைத் தொகுதிகள், சமய ஒழுக்கம், தத்துவம் ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது இந்திய வரலாறு முழுவதிலும், சமயக் குழுக்களுக்கும், சாதிக் குழுக்களுக்கும் பரஸ்பரத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இவை சமயத்திற்கும், சமூக வாழ்க்கைக்கு முள்ள தொடர்பாக பிரதிபலிலித்தன.

சமய இலக்கியங்களின் மூலமாகப் புதிய ஜாதிகள் உருவாயின. வழக்கில் உள்ள சமயக் கருத்துகளை ஒதுக்கிவிட்டோ அல்லது மாற்றியோ புதுக்குழுக்கள் தோன்றியுள்ளன. இதற்கு உதாரணங்கள் சமணம், பௌத்தம், லிலிங்காயதம், சீக்கியம், கபீர் பந்திகள். இச்சமயக் குழுக்கள், அவை தோன்றிய ஆரம்பக்காலத்தில் தீவிரக் கருத்துகள் கொண்டிருந்தன. சாதி வேறுபாடு களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் முடிவில் சாதி அமைப்பிலிருந்து இக்குழுக்கள் முற்றிலும் விடுவித்துக் கொள்ள இயலவில்லை. சமூக அமைப்பில் தீவிர மாறுதல் களை ஏற்படுத்துகிற அளவில் அக் குழுக்கள் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை. தீவிரத் தன்மைவாய்ந்த கருத்துகள் செயல்படுத்துவதற் கேற்றவாறு சமுதாய அடிப்படையில் மாறுதல்கள் நிகழவில்லை. மிகுதியான மக்களைக் கவர்ந்த புதிய சமயங்கள், குழுவினுள் சாதிகளை ஏற்படுத்திக் கொண்டன. இச்சமய இயக்கங்கள், சமூகத்தின் மீது அதிருப்தி கொண்டவர் களையும், சாதி அடுக்கில் தங்கள் தாழ்ந்த பதவியிலிலிருந்து விலக விரும்பியவர்களையும் பெரிதும் கவர்ந்தன. ஏனெனில் அவை சொல்லளவிலாவது வேறு பாடில்லை எனப் பறைசாற்றின.  

No comments:

Post a Comment