Thursday, January 16, 2014

வரலாற்றுப் பக்கங்களிலிருந்து...




""நான்தான் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர். நான் இளங்கலைப் பட்டதாரி. ஜோகன்னஸ்பர்கில் வழக்குரைஞராக ஆலிவர் டாம்போவுடன் இணைந்து சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியே சென்றதற்காக குற்றம் சுமத்தப் பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். மேலும் தன் மீது மே 1961-ஆம் ஆண்டு பொது வேலைநிறுத்ததிற்கு அழைத்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளேன்.

நான் ஒன்றை முதலிலேயே கூறிவிட விரும்புகிறேன்.தென் ஆப்பிரிக்க அரசு இங்கு நடக்கும் போராட்டங்களை அயல்நாட்டுச் சக்திகள் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தூண்டுதல் என்று கூறுவதை மறுக்கிறேன். அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு தனி  மனிதனாகவும், எனது மக்களின் தலைவனாகவும் நான் என்ன செய்ததாகக் கூறப்பட்டேனோ அதை நான் செய்தேன். இவற்றை நான் ஏன் செய்தேன் என்பது எனது தாய்நாட்டில் நான் பெற்ற அனுபவம் காரணமாகவே தவிர ஏதோ அயல்நாட்டு செல்வாக்கினால், புறத் தூண்டுதல் களினால் அல்ல.

ட்ரான்ஸ்கீயில் நான் என் இளம்பிராயத்தைக் கழித்த போது எனது இனத்தின் மூத்தவர்கள், சான்றோர்கள் எனக்கு பழைய நாட்களைப் பற்றிய கதைகளைக் கூறியுள்ளார்கள். அதில் தங்களது சொந்த நாட்டைக் காப்பாற்ற எங்கள் மூதாதையர்கள் போராடியது பற்றிய கதைகளே அதிகம். டிங்கானே மற்றும் பாம்பட்டா, ஹின்ட்சா மற்றும் மாகானா, ஸ்குன்க்டி மற்றும் டலாசிலி, மொஷூஷூ மற்றும் செகுகுனி ஆகியோர்கள் இந்த ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாட்டிலும் அவர்களது செயல்களுக்காகக் கொண்டாடப்படுபவர்கள். அப்போது நான் யோசித்தேன், வாழ்க்கை எனக்கு இந்த தேசத்திற் காகவும் விடுதலைக்காகவும் வாய்ப்பை வழங்குமா என்று. இந்த வழக்கைப் பொறுத்தவரை என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைச் செய்ததற்கு நான் மேற்கூறிய சம்பவங்கள், கதைகள் தூண்டுகோலாக அமைந்தது.

இவற்றையெல்லாம் நான் கூறும்போது, வன்முறை என்ற விஷயம் பற்றி சற்று நீளமாகவே கூற விரும்புகிறேன். இந்த நீதிமன்றத்தில் கூறப்பட்ட சில விஷயங்கள் உண்மை. சில விஷயங்கள் பொய். ஆனால் நான் சதிக்குத் திட்டமிட்டேன் என்பதை மறுக்கப் போவதில்லை. ஆனால் நான் அதனை ஒரு அலட்சியப் போக்கினாலோ அல்லது வன்முறையை நான் நம்புகிறேன் என்பதாலோ மேற்கொள்ளவில்லை. ஆண்டாண்டு காலமாக வெள்ளை நிறவெறி எங்கள் மக்கள் மீது செலுத்தும் வன்முறை, துரோகம், சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றை அமைதியான முறையில் யோசித்து  நிதானமாக திட்ட மிட்ட செயலாகும். சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் நாட்டில் எப்படி போராடாமல் இருக்க முடியும். போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை மனிதனை மதிக்காத மனித உரிமை மீறல் தான் எங்களை போராட தூண்டுகின்றது. இதற்காக துவங்கப் பட்ட அமைப்பு உருவாக நான் ஒரு அங்கமாக இருந்தேன். இதற்காக ஆகஸ்ட் 1962-இல் நான் கைது செய்யப்பட்டேன்.

முதலில் இந்த அரசின் கொள்கையினால், ஆப்பிரிக்க மக்கள் வன்முறையின் பாதையை தேர்வு செய்வது என்பது தடுக்க முடியாததும் தவிர்க்க முடியாததும் ஆகி விடும். இதனால் ஏற்படும் வன்முறை பயங்கரவாதமாக மாறி இந்த நாட்டில் வாழும் பல இன மக்களுக்குள் கடும் காழ்ப்பும், மோதல் போக்கும், பகைமையும் உருவாகும். ஒரு போர்கூட இத்தகைய பயங்கரத்தை நிகழ்த்தமுடியாத நிலை உருவாகியிருந்ததை உம்காண்ட்டோ இயக்கம் பரிசீலனை செய்தது.
மேலும் வெள்ளை நிறவெறி மேட்டிமைக்கு எதிராக ஆப்பிரிக்க மக்களுக்கு வன்முறையைத் தவிர வேறு பாதைகளும் இல்லை என்பதையும் நாங்கள் ஆலோசித்தோம். வெள்ளை நிறவெறிக்கு எதிராக சட்ட பூர்வமாக கேள்விகள் எழுப்பும் போராடும் வடிவங்களை சட்டபூர்வமாகவே அரசு நசுக்கியது. இந்த நிலையில் ஒன்று நாங்கள் தொடர்ந்து கீழான இனம் என்ற  அடையாளத்தை ஏற்று அடங்கவேண்டும் அல்லது அரசை எதிர்த்து போராட வேண்டும்.

நாங்கள் இதனால் முதலில் சட்டத்தை உடைக்க முடிவு செய்தோம். அதாவது வன்முறைக்கு வித்திடாத வகையில் சட்டத்தை உடைக்க திட்டமிட்டோம். இந்தக் கொள்கையை அரசு கண்மூடித்தனமாக வன்முறையினால் ஒடுக்கிய போது நாங்கள் வன்முறைக்குப் பதில் வன்முறையே என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டோம். ஆனால் இந்த வன்முறை பயங்கரவாதம் அல்ல.

உம்கான்ட்டோ இயக்கத்தை ஆரம்பித்த நாங்கள் அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர் களே. இதன் பின்னணியில் அகிம்சை என்ற பெரிய மரபு உள்ளது. பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது எங்கள் கொள்கை. தென் ஆப்பிரிக்கா இங்கு வாழும் அனைவருக்கும் உரித்தானது, ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. அந்தப் பிரிவு வெள்ளை இனமாக இருந்தாலும் சரி கறுப்பினமாக இருந்தாலும் சரி. இனப்போரை நாங்கள் விரும்பவில்லை கடைசி வரை எங்கள் கொள்கையும் மார்க்கமும் இதுதான். இதன் மீது அரசிற்கு சந்தேகம் இருந்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் வரலாறு இதனை நிரூபிக்கும்.

1912-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க உரிமைகளை பாதுகாக்கத் தொடங்கப்பட்டதே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். ஆப்பிரிக்க மக்கள் உரிமைகள் தென் ஆப்பிரிக்க சட்டம் மூலம் பெரிதும் குறைக்கப்பட்ட காலம் அது. 37 ஆண்டுகள் அரசியல் சட்டப் போராட்டத்தை அது தாங்கிப்பிடித்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் ஆப்பிரிக்க மக்கள் நலனை காக்க அனைத்தையும் நாங்கள் செய்தோம். ஆனால் வெள்ளை அரசு துரோக மிழைத்துவிட்டது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸை நிறுவிய எங்கள் தலைவர் லுடுலியின் வார்த்தைகளை நான் இங்கு நினைவு கூறுகிறேன்.

"30 ஆண்டுகளாக பொறுமையாக, மிதவாத உணர்வுடன் நாங்கள் அதிகாரத்தின் கதவுகளை தட்டியதை யார் கேட்காமல் இருக்க முடியும். யார் மறுக்க முடியும்? அகிம்சை போராட்டத்தின் பலன்கள் என்ன? கடந்த 30 ஆண்டுகளாக பல சட்டங்கள் எமது மக்களின் உரிமைகளை காவு வாங்கியுள்ளது. இப்போது உரிமைகள் என்பதேயில்லை என்ற நிலையைத்தான் எட்டியிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் போராட்டங்கள் விரயமாகிவிட்டன.'

1949-க்குப் பிறகு கூட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வன்முறையைத் தவிர்க்க பெரிதும் முயன்றது. ஆனால் இந்தத் தருணத்தில்தான் சட்டத்திற்குட்பட்ட போராட்டங்கள் பற்றிய மாற்றங்கள் எங்களிடம் தோன்றியது. சில சட்டங்களுக்கு எதிராக அமைதியாக ஆனால் சட்டவிரோதமாக போராடத் துணிந்தோம். ஒத்துழையாமை இயக்கம் போன்ற ஒன்றைத் தொடங்கி னோம். 8,500 பேர் நிறவெறிக்கொள்கைகளை மீறினர், ஜெயிலுக்கு சென்றனர். ஆனால் இதில் வன்முறை என்ற ஒரு துளியைக் கூட காட்ட முடியாது.

நானும் 19 பேரும் இந்தப் போராட்டத்தை நடத்தியதற் காகக் கைது செய்யப்பட்டோம். ஆனால் நீதிபதி எங்கள் நடவடிக்கைகளில் வன்முறையை காணமுடியவில்லை. அகிம்சை போராட்டமே என்பதை தீர்ப்பின் மூலம் வெளியிட்டார். அப்போதுதான் செயல்வீரர்கள் குழுவை அமைத்தோம். ஆனால் கொள்கைகள் அதேதான், செயல்வீரர்கள் ஏதோ வெள்ளை இனத்திற்கு எதிராக அணி திரளும் கறுப்பர் ராணுவப்படை அல்ல. வெள்ளையர் களோடு சிவில் யுத்தம் நடத்துவது அவர்கள் குறிக்கோள் அல்ல. அவர்கள் இயக்கத்தின் ஜனநாயக நடவடிக்கை களையே மேற்கொண்டனர். அதற்காகவே தற்போது சாட்டையடி தண்டனை சட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

1960-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க குடியரசை அறிவிக்கும் தீர்மானம் அரசால் நிறைவேற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான, 70% மக்கள்தொகை கொண்ட கறுப்பரின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வெள்ளைக் குடியரசின் மீது எங்களுக்கு ஐயம் எழுந்து தேசத்தின் எதிர்காலம் என்னாவது என்ற கவலை எழுந்தது. அப்போதுதான் மாநாடு ஒன்றைக்கூட்டி நான் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தேன். வீட்டிலேயே இருப்பது என்ற அந்தப் போராட்டம் அமைதியான போராட்டம் ஆகும். வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஆனால் ஆப்பிரிக்க அரசு மீண்டும் மீண்டும் வன்முறையை மக்கள் மீது பயன் படுத்தியது. இதனால்தான் உம்கான்ட்டோ என்ற இயக்கம் உருவானது.

போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவெடுத்தோம். இதுவல்லாது மற்ற வழிமுறைகள் என்பது ஒரு இழிவான சரணாகதியாகவே முடிந்து விடும் என்பதை நாங்கள் அறிந்தோம். போராட்டம் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. ஆனால், தொடர்ந்து போராடுவது எப்படி என்ற கேள்வி எங்களிடம் இருந்தது. நிறவெறியல்லாத ஜனநாயகத்திற்காகவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பாடுபட்டுவருகிறது. ஆனால் 50 ஆண்டுகால அகிம்சை போராட்டம் என்ன சாதித்தது என்றால் மேலும் மேலும் ஒடுக்குமுறை சட்ட அமலாக்கங்களையே.

வெள்ளை நிறவெறிக்கு எதிராக போராடத் துணிந்த காலங்களிலிருந்தே மக்கள் வன்முறை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் அவர்களை வேறு வழிக்கு திருப்பியுள்ளது. ஆனாலும் அகிம்சை முறை தொடர்ந்து தோல்விகளைத் தழுவ எங்களது தொண்டர்கள் வன்முறை எனும் தொந்தரவு தரும் கருத்துக்களை யோசிக்கத் தொடங்கினர்.

1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கத்தான் செய்தன. இவையெல்லாம் வன்முறையை விட்டால் தீர்வு இல்லை என்ற எண்ணப் போக்கை ஆப்பிரிக்க மக்களிடையே உருவாக்கியது. நகர்ப்புறத்தில் சிறு குழு ஒன்றே உருவானது. இவர்களை வளரவிட்டால் இவர்கள் வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல கறுப்பர்களுக்கு எதிராகவும் திரும்பிவிடுவர் என்பதை நாங்கள் அறியாமலில்லை.

ஜூன் மாதம் 1961-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சூழ்நிலையினை நீண்ட பரிசீலனை செய்தபிறகு நானும் எனது தோழர்களும் முடிவுக்கு வந்தோம், வன்முறை இந்த தேசத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை. இந்தத் தருணத்தில் அகிம்சையையும், சமாதானத்தையும் பிரச்சாரம் செய்வது நல்லதல்ல என்பதை தலைவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் எங்களது அமைதியான கோரிக்கைகளை அரசு அடக்குமுறையால் ஒடுக்கியது.

இந்த நிலைலியில்தான் உம்கான்ட்டோ வீ சிஸ்வி என்ற அமைப்பு தோற்றம் கொண்டது. இதை நாங்கள் ஏதோ ஆசைப்பட்டு துவங்கவில்லை. அரசின் கொள்கைகள் எங்களை இந்த முனைக்கு நகர்த்தியது. உம்கான்ட்டோ அரசியல் பிரகடனத்தில் நாங்கள் என்ன கூறினோம் என்றால், எந்த ஒரு தேசத்திற்கும் அதன் வாழ்க்கையில் ஒருநேரம் வரும். அதாவது இரண்டே இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று அடங்கு அல்லது அடக்கு. இந்தத் தருணம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துவிட்டது. நாங்கள் அடங்கப்போவதில்லை, அனைத்துத் தரப்பிலிருந்தும் தாக்குவது ஒன்றே வழி என்ற முறைக்கு வந்தோம். மக்களைக் காப்பாற்ற, எங்கள் எதிர்காலத்தைக் காப்பற்ற, எங்கள் சுதந்திரத்தை அடைய. இனவெறி ஆதிக்கத்தை தகர்த்தெறிவோம்!

No comments:

Post a Comment